சென்னையில் வட மாநில மாணவர்களின் துப்பாக்கிச் சண்டைக்குக் காரணம்... காதல்!
சென்னை: சென்னையில் வட மாநில மாணவர்கள் துப்பாக்கியால் சுட்டு சண்டை போட்டுக் கொண்ட பரபரப்பான விவகாரத்திற்கான பின்னணிக் காரணம் தெரிய வந்துள்ளது.
சென்னை மதுரவாயலில் உள்ள ஏசிஎஸ் என்ஜீனியரிங் கல்லூரியில் பிடெக் படித்து வருபவர் பீகாரைச் சேர்ந்த ஆதித்யா காஷ்யப். இவர் கம்பர் நகர் 2வது தெருவில் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளார்.
இவர் படித்து வந்த கல்லூரியில் அதே பிடெக் 4ம் ஆண்டு படித்து வருபவர் ஹேமந்தி தாஸ். இவர் திரிபுராவைச் சேர்ந்தவர்.
இருவரும் ஒரே வீட்டில்தான் தங்கியுள்ளனராம், நான்கு ஆண்டுகளாக. காதலும் மலர்ந்துள்ளது. நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் உறவு கசந்து இருவரும் சில மாதங்களுக்கு முன்பு பிரிந்தனர். அப்போது ஆதித்யாவின் கல்லூரி சான்றிதழ்களை ஹேமந்தி எடுத்துச் சென்று விட்டதாக தெரிகிறது. அதேபோல ஹேமந்தியின் பாஸ்போர்ட்டை ஆதித்யா கைப்பற்றிக் கொண்டார்.
பிரிந்து போன ஹேமந்தி அடுத்த காதலனைப் பிடித்தார். அந்த மாணவர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் ஆவார். அவரிடம், தனது பாஸ்போர்ட் ஆதித்யாவிடம் சிக்கியிருப்பதாகவும், அதை மீட்டுத் தருவதாகவும் கூறியுள்ளார் ஹேமந்தி. காதலிக்கு ஒன்று என்றால்தான் பொங்கி விடுமே.. அதேபோல மணீஷும் பொங்கி எழுந்தார்.
ஆதித்யாவிடம் செல்லில் பேசிய மணீஷ் குமார், பாஸ்போர்ட்டைக் கொண்டு வருமாறு கூறியுள்ளார். அதை ஏற்ற ஆதித்யா, கல்லூரிக்கு எதிரே உள்ள ஹோட்டலுக்கு வருமாறு கூறினார்.
மணீஷும், ஹேமந்தியை பைக்கில் ஏற்றிக் கொண்டு அங்கு வந்தார். தன்னுடன் நெருக்கமாக பழகி, எல்லாவற்றையும் அனுபவித்த ஹேமந்தி, புதுக் காதலன் கிடைத்தவுடன் அவனுடன் ஜோடி போட்டுக் கொண்டு வந்து இறங்கியதைப் பார்த்த ஆதித்யா டென்ஷனாகி விட்டார். உடனே ஹேமந்தியுடன் சண்டைக்குப் போனார்.
அதை மணீஷ் தட்டிக் கேட்டார். 3 பேரும் நீண்ட நேரம் வாய்ச்சண்டையில் இறங்கினர். அப்போது ஆதித்யா தான் வைத்திருந்த பீகாரைச் சேர்ந்த கள்ளத் துப்பாக்கியை எடுத்து மணீஷ், ஹேமந்தியை சுட முயன்றார். ஆனால் ஸ்டிரைக்கர் வரவில்லை. இதனால் சுட முடியவில்லை. இதைப் பார்த்து ஹேமந்தியும், மணீஷும் தப்பி ஓடினர். ஆனால் ஆத்திரத்துடன் அவர்களை விரட்டிய ஆதித்யா, துப்பாக்கிக் கட்டையால் இருவரையும் சரமாரியாக அடித்தார். இதில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. மயங்கி விழுந்தனர்.
உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து ஆதித்யாவை மடக்கிப் பிடித்தனர். போலீஸாரும் வந்தனர். துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
போலீஸ் விசாரணையின்போது ஹேமந்தி கொடுத்த வாக்குமூ்லத்தில்,
நானும், ஆதித்யா கஷ்யூப்பும் இருவரும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் போதே காதலித்து வந்தோம். இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதால், ஒன்றாக ஒரே வீட்டில் தங்கி இருந்தோம். தினமும் குடித்து விட்டு வரும் ஆதித்யா, என்னை அடித்து உதைப்பார். இதனால் அவருடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் அவரை விட்டு பிரிந்து விட்டேன்.
அதன்பிறகுதான் எனக்கு மணீஷ்குமாரின் நட்பு கிடைத்தது. இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆதித்யா என்னுடன் தகராறில் ஈடுபட்டு எங்களை துப்பாக்கியால் தாக்கினார் என்றார்.
துப்பாக்கிக் கலாச்சாரத்தை அனுமதிக்க மாட்டோம் -கூடுதல் கமிஷனர்
இதற்கிடையே, சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் ராஜேஷ் தாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சென்னையில் லட்சக்கணக்கான வடமாநில வாலிபர்கள் படித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரையுமே குற்றவாளியாக பார்க்க கூடாது. அதே நேரத்தில் மாணவர்கள், துப்பதுப்பாக்கிகளை வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது.
சென்னையில் 3 சம்பவங்களில் இதுபோன்று மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி கலாச்சாரத்தை இங்கு அனுமதிக்க முடியாது. வட மாநில மாணவர்கள் யாராவது இனிமேல் துப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் துப்பாக்கிகளுடன் பிடிபடும் மாணவர்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.