6-வது ஐ.பி.எல் விளையாட்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில், ஏப்ரல் 6, 13, 15, 22, 25-தேதிகளிலும் மற்றும் மே மாதம் 16, 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
விளையாட்டு போட்டியையொட்டி, அன்றைய தினங்களில் இரவு 10.40 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் இரவு 10.50 மணிக்கு சேப்பாக்கத்தையும், இரவு 11.25 மணிக்கு வேளச்சேரியையும் சென்றடையும்.
இதே போன்று மறுமார்க்கத்தில், இரவு 11.30 மணிக்கு வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரை வரை சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் இரவு 12.05 மணிக்கு சேப்பாக்கத்தையும், இரவு 12.15 மணிக்கு சென்னை கடற்கரையையும் வந்தடையும்.
கும்மிடிப்பூண்டி சிறப்பு ரயில்
இதே போன்று எளாவூரில் நடைபெற்று வரும் பைபிள் கன்வென்ஷன் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ளும் வகையில், இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 8.50 மணி மற்றும் பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில்கள் எளாவூர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த ரெயில்கள் எளாவூரில் இருந்து முறையே காலை 10.40 மற்றும் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்திற்கு திரும்பும்.
ரயில்பாதை பராமறிப்பு பணி
மேலும் கெட்டாண்டபட்டி-ஜோலார்ப்பேட்டை இடையே சாலை மேம்பால வேலை நடைபெறுவதால், வருகிற 9, 11, 13, 16, 18, 20, 23, 25 மற்றும் 27-ந் தேதிகளில் பெங்களூர்-அரக்கோணம் பயணிகள் ரெயில் ஜோலார்ப்பேட்டை ரெயில் நிலையத்தில், 2 1/2 மணி நேரம் நின்று செல்லும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.