வீரபாண்டியார் உறவினர்களிடம் திடீர் போலீஸ் விசாரணை.. உள்ளே போகப் போவது யார்?
வீரபாண்டி ஆறுமுகம், அவரின் உறவினர்கள், ஆதரவாளர்கள் மீது, அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு, பிரிமியர் ரோலர் மில் நில அபகரிப்பு, தாதநாயக்கன்பட்டி பாலமோகன்ராஜ் நிலம் ஆக்ரமிப்பு, ஐந்து ரோடு அக்ரோ கூட்டுறவு சங்க நில அபகரிப்பு ஆகிய வழக்குகள் போடப்பட்டன. வீரபாண்டியார் இறந்து விட்டதால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டார்.
இந்த வழக்குகளில் இன்னும் குற்றப்பத்திரிக்கை நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய வில்லை. தற்போது குற்றப்பத்திரிக்கையை தயார் செய்யும் பணியை நில அபகரிப்பு போலீஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு தொடர்பாக மாஜி ஆர்.டி.ஓ., பாலகுரு மூர்த்தியிடமும், மாஜி இன்ஸ்பெக்டர் லட்சுமணன், வீரபாண்டியாரின் உதவியாளர் சேகர், சபாரி பாஸ்கர், செவ்வாய்ப்பேட்டை இளங்கோவன், தாதை கார்த்தி ஆகியோரிடம் நில அபகரிப்பு மீட்பு குழு இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ஞானசேகரன் விசாரணை நடத்தினார்.
பாலமோகன்ராஜின் நில அபகரிப்பு விவகாரத்தில், வீரபாண்டியாரின் மற்றொரு உதவியாளரான கௌசிக பூபதியிடம், திங்கட்கிழமை விசாரணை நடத்த போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
வீரபாண்டியாரின் மகன் ராஜாவிடம் விசாரணை நடத்த போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர், ஆனால், அவரின் சார்பில் வக்கீல் மூர்த்தி ஆஜராகி நில அபகரிப்பு மீட்பு குழு போலீஸாரிடம் ஆவணங்களை வழங்கினார்.
மேலும், இந்த வழக்குகளில் தொடர்புடைய வீரபாண்டி ராஜா, அவரின் மனைவி சாந்தி, பிருந்தா செழியன் உட்பட உறவினர்கள், ஆதரவாளர்கள் பலர் போலீஸ் தங்களை கைது செய்யக் கூடாது என, உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருந்தனர்.
ஆனால், தடை உத்தரவு பெற்று ஓர் ஆண்டுக்கு மேல் ஆகி விட்ட நிலையில், அவர்கள் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததோடு, உயர்நீதிமன்ற உத்தரவின் மீதான மேல் நடவடிக்கைகள் எதையும் மேற் கொள்ள வில்லை. அதை அடுத்து அவர்களுக்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இதனால் அடுத்தடுத்து பலர் கைதாகலாம் என்ற எதிர்பார்ப்பில் சேலம் திமுகவினர் உள்ளனர்.