உகாண்டாவில் குட்டைப் பாவாடைக்கு தடை...பியான்ஸ், மடோனாவுக்கும் சிக்கல்
கம்பாலா: உகாண்டா நாட்டில் பெண்கள் குட்டைப் பாவாடை அதாவது மினி ஸ்கர்ட் போட்டு நடமாடுவதற்கு தடை வரவுள்ளது. இந்த சட்டம் காரணமாக டிவியில் பாடகி பியான்ஸின் நிகழ்ச்சியை ஒளிபரப்பவும் சிக்கல் எழுந்துள்ளது.
உகாண்டா நாட்டில் பொது இடங்களில் பெண்கள் குட்டைப் பாவாடையுடன் வலம் வருவதற்கு தடை விதித்து சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. வந்துள்ளது. இதை மீறி யாராவது மினி ஸ்கர்ட்டில் வந்தால் கைது செய்யப்படுவார்கள்.
இந்தப் புதிய சட்டத்தால் தற்போது டிவியில் கவர்ச்சிப் பாடகி பியான்ஸின் நிகழ்ச்சிக்கும் தடை வரவுள்ளது. விரைவில் இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.
இந்த சட்டத்தை எதிர்த்து அங்கு போராட்டங்களும் வெடித்துள்ளன.
குட்டைப் பாவாடைக்கு 10 வருஷம் ஜெயில்
குட்டைப் பாவாடைக்கு தடை விதித்துக் கொண்டு வரப்படும் சட்டம் அமலுக்கு வந்தால், குட்டைப் பாவாடை அணிந்து வெளியில் வருவோருக்கு 10 வருடம் சிறைத் தண்டனை அல்லது 1 கோடி உகாண்டா ஷில்லிங் அபராதம் அல்லது இரண்டுமே சேர்த்து தண்டனையாக கிடைக்கும்.
உடல் பாகம் வெளியில்தெரிந்தால் தவறு
இந்த சட்டம் குறிறித்து அந்த நாட்டு அமைச்சர் சைமன் லொகோடோ கூறுகையில், பெண்களின் உடல் பாகங்கள் வெளியில் தெரியும்படி டிரஸ் போட்டால் அது தவறாகும், சட்டவிரோதமாகும். முழங்காலுக்கு மேலுடன் முடியும் எந்த டிரஸ்ஸையும் பெண்கள் போடக் கூடாது. மினி ஸ்கர்ட் போட்டால் அப்பெண் கைது செய்யப்படுவார் என்றார்.
சினிமாவிலும் கூடாது
அரசு சட்ட வல்லுநரான பிரெட் ருஹிண்டி கூறுகையில், சினிமாவிலும் டிவியிலும் கூட இந்த உடை தடை செய்யப்படுகிறது. இன்டர்நெட்டையும் கூட கண்காணித்து வருகிறோம் என்றார்.
பியான்ஸுக்கும் சிக்கல்
இந்த சட்டத்தால் பியான்ஸ், மடோனா போன்ற கவர்ச்சிப் பாடகிகளுக்கும் கூட சிக்கல்தானாம். அதாவது இவர்களின் நிகழ்ச்சிகள் டிவியில் ஒளிபரப்ப தடை விதிக்கப்படுமாம். காரணம் இவர்கள் செக்ஸியாக உடை அணிவதால்.
இடி அமீனின் ஜெராக்ஸ்
முன்பு சர்வாதிகாரி இடி அமீன் இப்படித்தான் மினி ஸ்கர்ட்டை தடை செய்து சட்டம் கொண்டு வந்தார். பின்னர் இடி அமீனின் வீழ்ச்சிக்குப் பிறகு அது விலக்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்த சட்டம் வருகிறது.
பெண்கள் அதிருப்தி
இந்த சட்டத்திற்கு உகாண்டா நாட்டுப் பெண்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோரிடம் கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் கிளம்பியுள்ளது.