தம்பதிகள் பூஜைக்கு அமர்சிங்குடன் வந்து ஆசி பெற்ற ஜெயபிரதா
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.யாக உள்ளார் நடிகை ஜெயபிரதா. அவர் விரைவில் தேசிய அரசியலில் இருந்து தனது சொந்த மாநிலமான ஆந்திர அரசியலுக்கு வரப்போகிறார். அவர் ராஜமுந்திரி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அவர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் தான் சேரக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெயபிரதா தனது அரசியல் குருவான அமர்சிங்குடன் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் சோவூரில் இருக்கும் பகவான் ராமதூத சுவாமி ஆசிரமத்திற்கு வந்தார். ஆசிரமத்தில் நடந்த தாம்பத்ய விரத பூஜையில் அவர்கள் கலந்து கொண்டனர். இந்த தம்பதி பூஜையில் ரயில்வே இணை அமைச்சர் சூரிய பிரகாஷ் ரெட்டி, ஆந்திர துணை முதல்வர் தாமோதரராஜ் உள்பட எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் என பலர் தங்கள் மனைவிகளுடன் கலந்து கொண்டனர்.
பூஜையின்போது நாமதூதசுவாமி ஆண்களுக்கு முத்து மாலை அளித்தார். அதை அவர்கள் சுவாமிகளின் வழிகாட்டுதலின்பேரில் தங்கள் மனைவிகளுக்கு அணிவித்தனர். ஜெயபிரதாவும், அமர்சிங்கும் மாலையை வாங்கி அவரவர் அணிந்து கொண்டு சுவாமியிடம் ஆசி பெற்றனர்.