இந்தியாவின் இளம் தலைமுறை அரசியல்வாதிகள்…
இளைஞர்கள் அரசியலில் பங்கெடுக்கவேண்டும் என்ற குரல் நாடுமுழுவதும் ஒலிக்கிறது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள்தான் திராவிட கட்சிகளில் தலைவர்களாகவும், அமைச்சர்களாகவும் பதவி வகிக்கின்றனர்.
இன்றைய இலங்கைப் பிரச்சினைப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் நாளை அரசியலில் ஈடுபட்டு எதிர்கால தலைவர்களாக உயர வாய்ப்புள்ளது. அரசியல் பற்றியும், அரசியல் தலைவர்கள் பற்றியும் தெளிவான பார்வையும் சிந்தனையும் இருந்தால் எதிர்காலத்தில் தலைவராக உயர முடியும்.
இந்தியாவின் எதிர்காலத்தை வழிநடத்திச் செல்லக்கூடிய இளம் தலைமுறை அரசியல்வாதிகள் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது படியுங்களேன்.
ராகுல் காந்தி (ஜூன் 19, 1970)
நேரு குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் காந்திக்கு 43 வயதாகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மகன். காங்கிரஸ் கட்சியில் துணைத்தலைவராக பதவி வகிக்கும் இவர் அமேதி தொகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ளார்.
இவரின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பிரதமர் பதவியேற்றவர்கள். இதனாலேயே இப்போது பிரதமர் பதவி வேட்பாளராக முன்மொழியப்படுகிறார்.
ஓமர் அப்துல்லா ( மார்ச் 10,1970)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக உள்ள ஒமர் அப்துல்லா, பரூக் அப்துல்லாவின் மகனாவார். இவர் 2001ம் ஆண்டு அடல்பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
அகிலேஷ் யாதவ் (ஜூலை 1, 1973)
சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கின் மகனான இவர் உத்தரபிரதேச மாநில முதல்வராக பதவி வகிக்கிறார். பொறியாளரான இவர், கட்சியின் மாநிலத் தலைவர் ஆவார். இவரின் மனைவியும் அரசியல் களத்தில் உள்ளார்.
ஜோதிராதித்ய சிந்தியா (ஜனவரி 1, 1971)
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், அமைச்சர் மாதவராவ் சிந்தியாவின் மகன். ஐக்கிய நாடுகளின் பொருளாதார மேம்பாட்டு பிரிவில் பயிற்சி பெற்றார். மத்திய பிரதேசத்தின் குவாலியர் பகுதியைச் சேர்ந்த இவர் மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராக உள்ளார்.
சச்சின் பைலட் (செப்டம்பர் 7, 1977)
இவர் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேஷ் பைலட்டின் மகன். ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் தொகுதியின் பிரதிநிதியான இவர், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நிர்வாகப் பட்டப்படிப்பு படித்தவர். மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராக பதவி வகிக்கிறார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் மகளை மணந்துள்ளார்.
மிலிந்த் தியோரா (டிசம்பர் 4, 1976)
தெற்கு மும்பையின் காங்கிரஸ் எம்.பி.யான இவர் மத்திய அமைச்சர் முரளி தியோராவின் மகன். இவர் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். மக்களைவையின் இளம் எம்.பி.க்களில் ஒருவராக திகழ்கிறார்.
நவீன் ஜிந்தால் (மார்ச் 9, 1970)
தொழிலதிபரும் அரசியல்வாதியுமான ஓ.பி.ஜிந்தாலின் மகனான இவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். ஹரியானா மாநிலத்தின் குருஷேத்திரா தொகுதியின் பிரதிநிதி. எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், குதிரைகளின் மீது இருந்து துடுப்பால் பந்தாடும் "போலோ' அணியை தனக்கென சொந்தமாக வைத்திருப்பவர்!
துஷ்யந்த் சிங் (செப்டம்பர் 11, 1973)
ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜூவின் மகன். பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யான இவர் சுவிட்சர்லாந்தில் மேலாண்மை பட்டம் பெற்றுள்ளார்.
சுப்ரியா சுலே (ஜூன் 30, 1969)
மகாராஷ்டிர மாநிலம் புனே தொகுதியின் எம்.பி.யான இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் மகள். இவர், மும்பை ஜெய்ஹிந்த் கல்லூரியில் பி.எஸ்சி பட்டம் பெற்றுள்ளார்.
பிரியா தத் (ஆகஸ்ட் 28, 1966)
அரசியல்வாதியும், நடிகருமான சுனில் தத்- நர்கிஸ் மகளான இவர், நடிகர் சஞ்சய் தத்தின் சகோதரியுமாவார். இவர் ஒரு சமூக சேவகி. மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரங்களில் ஈடுபாடு உடையவர்.மும்பை பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பட்டம் பெற்ற இவர், மும்பை வடக்கு தொகுதியின் பிரதிநிதி.
அகாதா சங்மா (ஜூலை 24, 1980)
மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவின் மகள் அகாதா சங்மா. மேகாலயா மாநிலத்தின் துரா தொகுதியின் பிரதிநிதியான இவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இந்திய நாடாளுமன்றத்திலேயே மிகவும் இளைய அமைச்சர் மற்றும் எம்.பி. என்ற பெருமையை பெற்றுள்ளார். மத்திய இணை அமைச்சராக உள்ளார்.