படிக்கும் வயதில் காதல்... சிவகங்கையில் சுந்தரபாண்டியன் ஸ்டைல் கொலை...
சிவகங்கை: சிவகங்கை அருகே காதல் தகராறில் கல்லூரியில் படிக்கும் அண்ணன், தம்பிகள் இருவர் குத்தி கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத நண்பனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருக்கிறான்.
காதல் தகராறில் மாணவர்கள் கொலை என்ற செய்திகள் தற்போது ஊடகங்களில் அதிகம் வெளியாகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் நடந்த காதல் தகராறு கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை அருகே உள்ள முத்துப்பட்டியை சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மூத்த மகன் அருண்குமார் (22), இளைய சுரேஷ் (21). இதில் அருண்குமார் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியிலும், சுரேஷ் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் படித்து வந்தனர்.
சிவகங்கையில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவியை சுரேஷ் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதே மாணவியை இடைக் காட்டூரை சேர்ந்த செந்தில் என்பவரும் காதலித்து வந்துள்ளார். (படத்தில் வலது ஓரம் இருப்பவர்) செந்தில் தனியார் பள்ளியில் ப்ளஸ் 1 படித்து வருகிறார்.
ஒரே பெண்ணை காதலிப்பது தொடர்பாக செந்திலுக்கும், சுரேசுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரச்சனை தீர்த்து சமரசமாக போகலாம் என்று கூறி வெள்ளிக்கிழமை இரவு செந்தில்குமார், சுரேசை ஒரு இடத்திற்கு அழைத்துள்ளார்.
இதனை நம்பிய சுரேஷ் தனது அண்ணன் அருண்குமார் மற்றும் நண்பர்கள் அபினேஷ் உள்ளிட்ட 4 பேரை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். முத்துப்பட்டியில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் கீழக்குளம் செல்லும் சாலையில் அவர்கள் நின்று கொண்டிருந்த போது செந்தில் தலைமையில் 8 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். தான் விரும்பிய பெண்ணை காதலிக்க கூடாது என்றும் அவளை மறந்துவிடு என்று சுரேஷிடம் செந்தில் கூறியுள்ளார்.
இதில் வாய்த் தகராறு ஏற்படவே சுரேஷ், அருண்குமார் ஆகியோரை கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தியால் குத்தினர். மேலும் நண்பர் சுரேசையும் சரமாரியாகத் தாக்கினர்.
இதைப் பார்த்த அபினேஷ் அங்கிருந்து தப்பினார். கத்தியால் குத்தப்பட்ட சகோதரர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதையடுத்து செந்தில் மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
தப்பியோடிய அபினேஷ் முத்துப்பட்டிக்கு சென்று உறவினர்களிடம் கூறவே அவர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.
அருண்குமார், சுரேஷ் ஆகியோர் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தகராறில் பலத்த காயமடைந்த மற்றொரு சுரேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கிறார்.
இதனிடையே தப்பியோடிய கொலையாளிகள் 8 பேரில் செந்தில் உள்ளிட்ட 5 பேரை டிஎஸ்பி வெள்ளைத்துரை தலைமையிலான போலீசார் பிடித்துள்ளனர்.
கூலிப்படை அமைத்து....
அவர்கள் அனைவரும் சிவகங்கை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் மேல்நிலைப் பள்ளி கல்வியைக் கூட முடிக்காதவர்கள். அவர்கள் கூலிப்படை அமைத்து கல்லூரி மாணவர்களை சுந்தரபாண்டியன் சினிமா பாணியில் கொலை செய்துள்ளனர்.
படிக்கும் வயதில் காதலிப்பது படிப்பை பாடிப்பதோடு கொலை வரைக்கும் தூண்டியுள்ளது. ஒரு மாணவியை இருவர் காதலித்த குற்றத்திற்காக இரண்டு போரின் உயிர் போனதோடு 10 பேரின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.