சட்டசபையில் தர்ணா- திமுக எம்.எல்.ஏக்கள் குண்டு கட்டாக வெளியேற்றம்! 2 நாட்கள் சஸ்பென்ட்
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் கர்நாடக அரசு பெண்ணையாற்று நீரை திருப்பும் நடவடிக்கை பற்றி ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ. வேலு, இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. டில்லிபாபு, பா.ம.க. எம்.எல்.ஏ. கணேஷ்குமார் ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர். பின்னர் பதிலளித்த அமைச்சர் கே.வி.ராமலிங்கம், பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகம் கட்டி வரும் தடுப்பு பணிகளை கண்காணிக்க நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பெண்ணையாற்று நீரை பாதுகாக்க அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பெண்ணையாறு, காவிரி நதி நீர்பிரச்சினைகளில் தமிழ்நாட்டின் உரிமையை தி.மு.க. விட்டுக்கொடுத்து விட்டது. இழந்த உரிமையை மீட்பதில் நமது முதல்வருக்கு நிகராக யாரும் இல்லை. தி.மு.க. ஆட்சியின் போதுதான் இந்த இரு நதிகளின் பிரச்சினையில் தமிழக உரிமை தாரை வார்க்கப்பட்டது என்று பேசினார்.
இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். துரைமுருகன் கூறுகையில், அமைச்சர் இதற்கு சரியான விளக்கம் தர வேண்டும் என்றார். உடனே அமைச்சர் கே.பி. முனுசாமி எழுந்து, பெண்ணையாறு, காவிரி நதி நீர் பிரச்சினைகளில் நமது அடிப்படை உரிமைகளை தி.மு.க. வலு இழக்க செய்துவிட்டது என்று மீண்டும் கூறினார். இதைத் தொடர்ந்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, காவிரி பிரச்சினையில் 2006-ல் இறுதி தீர்ப்பு வெளியானது. அந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டிருந்தால் நமக்கு உடனே உரிமை கிடைத்து இருக்கும். ஆனால் மத்திய அரசில் அங்கம் வகித்த நீங்கள் அதை செய்ய தவறி விட்டீர்கள். அந்த இழந்த உரிமையை முதல்வர் மீட்டர். நீங்கள் செய்ய வேண்டியதை நாங்கள் செய்துள்ளோம் என்றார்.
சட்டசபையில் தர்ணா
அமைச்சர்களின் இந்த விளக்கங்களுக்கு தி.மு.க. சார்பில் பதில் அளிக்க துரைமுருகன் சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். ஆனால் சபாநாயகர் தனபால் விவாதம் செய்ய இப்போது அனுமதி இல்லை என்றார். ஒரே வார்த்தையில் கேள்விகளை கேட்டு முடியுங்கள் என்று சபாநாயகர் அறிவுறுத்தினார். இதனை திமுக எம்.எல்.ஏக்கள் ஏற்கவில்லை. அவர்கள் எழுந்து நின்று பதில் சொல்ல அனுமதி கோரி முழக்கமிட்டனர். சபாநாயகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் சபாநாயகர் அனுமதி கொடுக்காததால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். துரைமுருகன், அனிதா ராதாகிருஷ்ணன், செங்குட்டுவன், தங்கம் தென்னரசு, பெரியசாமி, பெரிய கருப்பன் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கை முன்பு சட்டசபைக்குள் தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். அவர்களுடன் மு.க.ஸ்டாலினும் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
வெளியேற்றம்- சஸ்பென்ட்
இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம், அவை கண்ணியத்துக்கு குறைவு ஏற்படும் வகையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நடந்து கொண்டதால், கட்டுப்பாட்டை மீறி குந்தகம் விளைத்ததால் அவர்களை இன்றும், நாளையும் சபை நடவடிக்கைகளில் தற்காலிகமாக நீக்கம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றார். உடனே சபாநாயகர், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் இன்றும் நாளையும் 2 நாட்களுக்கு சஸ்பென்ட் செய்வதாக அறிவித்தார். எனவே மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் அடுத்த 2 நாட்களுக்கு சபை நடவடிக்கைகளில் பங்கேற்க இயலாது.