அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி? - கிளிண்டன் சூசகம்
வாஷிங்டன்: அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி போட்டியிடுவார் என கிளிண்டன் சூசகமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக 1993 முதல் 2001ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் பில் கிளிண்டன் . இவரது மனைவி ஹிலாரி கிளிண்டன் , ஒபாமாவின் அமைச்சரவையில் வெளியுறவு துறை அமைச்சராக நான்கு ஆண்டு பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவார் என்ற செய்திகள் வெளியாகிய போது, அதை ஹிலாரி கிளிண்டன் உறுதியாக மறுத்தார். இந்நிலையில், 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவார் என அவரது கணவரும் அமெரிக்க முன்னாள் அதிபருமான பில் கிளிண்டன் கூறியுள்ளார்.
விரிவுரையாளராக...
வெளியுறவு துறை மந்திரி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், பொருளாதார மற்றும் கல்லூரி கருத்தரங்கங்களில் விரிவுரையாளராக அவர் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
ஆதரவாளர்களிடையே பேசிய கிளிண்டன்...
அமெரிக்காவில் புதிய அதிபராவதற்குரிய தகுதி படைத்த பலர் இருக்கிறார்கள். இரண்டு முறைக்கு மேல் ஒருவர் அதிபர் பதவியை வகிக்க கூடாது என்ற கொள்கையில் திடமாக இருப்பவன் நான். எனினும், எதிர்காலத்தில் மூன்றாம் முறை அதிபராகும் எண்ணம் தற்போதைய அதிபர்களுக்கு ஏற்படுமானால், அதை நான் எதிர்க்க மாட்டேன்.
அடங்காத ஆசையில் திறமைசாலிகள்...
அமெரிக்காவின் அதிபராக ஒரு முறையாவது இருக்க வேண்டும் என்ற அடங்காத ஆசையில் ஏராளமான திறமைசாலிகள் சரியான வாய்ப்பை நோக்கி காத்திருக்கிறார்கள் என கூறினார்.
ஹிலாரியின் மௌனம்...
பதவி விலகலுக்கு பின்னர் அதிபர் வேட்பாளர் என்று சிலர் தன்னை முன்னிலைப்படுத்தும் போது அதை ஆமோதிக்காமலும், மறுக்காமலும் ஹிலாரி கிளிண்டன் மவுனம் காத்து வருகிறார்.
கருத்து பரவுகிறது...
இந்நிலையில், அவரது கணவர் பில் கிளிண்டன் ஹிலாரியை மனதில் வைத்துதான் இவ்வாறு பேசியுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.