எமர்ஜென்சி காலத்தில் அரசை எதிர்க்க 'சிஐஏ'விடம் நிதி உதவி கோரிய ஜார்ஜ் பெர்னாண்டஸ்: விக்கிலீக்ஸ்
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் தேசிய ஜனநாயககக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் அவர். 1975-ல் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. அதை எதிர்த்து கடுமையாகப் போராட்டம் நடத்தி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். அமெரிக்காவை எதிர்த்து சோசலிசத்தை பேசக் கூடியவராக ஜார்ஜ் பெர்னாண்டஸ் அப்போது பார்க்கப்பட்டார்.
ஆனால் அதே ஜார்ஜ் பெர்னாண்டஸ்தான், எமர்ஜென்சி காலத்தில் மத்திய அரசுக்கு எதிராக சீர்குலைவு நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏவிடம் நிதி கோரினார் என்கிறது விக்கி லீக்ஸ். விக்கிலீக்ஸ் தகவலின்படி, 1975 ஆம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதியன்று பிரெஞ்ச் தொழில்துறை அமைச்சர் மான்பிரெட் துரல்ச்சை ஜார்ஜ் பெர்னாண்டஸ் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது இந்திய அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு பிரெஞ்சு அரசின் உதவியை பெர்னாண்டஸ் கோரியிருக்கிறார். ஆனால் பிரெஞ்ச் அரசு உதவி செய்ய மறுக்கிறது. இதைத் தொடர்ந்து சிஐஏவின் தொடர்புகளை ஏற்படுத்தித் தருமாறு ஜார்ஜ் பெர்னாண்டஸ் கேட்டிருக்கிறார். மேலும் இந்த உரையாடலின் போது இந்திய அரசுக்கு எதிராக சீர்குலைவு நடவடிக்கையில் ஈடுபட 300 பேர் தம்முடன் இருப்பதாகவும் தென்னிந்தியாவில் ரயில்வே பாலங்களையும் மும்பை- புனே இடையேயான ரயில் பாலத்தையும் தகர்த்திருக்கிறோம் என்றும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியுள்ளார் என அதில் இடம்பெற்றுள்ளது.