பாலியல் தொந்தரவு: மகளை காக்க போராடிய தாய் பரிதாப பலி
குண்டூர்: ஆந்திராவில் போதை ஆசாமிகளின் தொந்தரவில் இருந்து மகளைக் காக்கப் போராடிய தாய் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரில் நேற்று இரவு 48 வயதான ஒரு பெண் தனது 21 வயது மகளுடன் கடைத்தெருவுக்கு சென்றிருந்தார். சாமான்களை வாங்கிக்கொண்டு திரும்பியபோது அங்கு வந்த போதை ஆசாமி, இளம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டான். இதனை அந்தப் பெண்ணின் தாயார் தட்டிக்கேட்டார். அப்போது தகராறு ஏற்பட்டது. அந்த போதை ஆசாமிக்கு ஆதரவாக அவரது நண்பர்கள் சூழ்ந்துகொண்டனர்.
ஒருகட்டத்தில், தகராறு முற்றிய நிலையில் மகளைக் காப்பாற்ற போராடிய அந்தப் பெண்ணை பிடித்து கீழே தள்ளியுள்ளனர். தடுமாறி சாலையில் விழுந்த அந்த பெண் மீது லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்ததாக கூறப்படுகிறது. இந்த குற்றத்தில் தொடர்புடைய நபர்கள் உள்ளூர் அரசியல்வாதிகளின் மகன்கள் என்று வெளியான செய்திகளை போலீஸ் அதிகாரிகள் மறுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர்களையும் போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர்.
பெண்ணின் மரணத்திற்கு காரணமானவர்களின் பெற்றோர் உள்ளூரில் செல்வாக்குமிக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் பற்றிய தகவல்களை போலீசார் வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.