சென்னை விமான நிலையத்தில் புகுந்த இராஜநாகம்.. அலறிய போலீஸ் மோப்ப நாய்கள்
காவல் துறையில் மோப்பநாய்கள் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களின் போது துப்பறிவதற்கும், போதைப்பொருட்களை கண்டறிவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. சென்னை விமான நிலையத்திலும், வெடிகுண்டுகளை கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் பிரிவில் மோப்பநாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்காகப் பத்து நாய்களும், அவற்றைப் பழக்கும் 13 பணியாளர்களும் இப்பிரிவில் உள்ளனர். ஆனால், அவற்றைப் பாதுகாக்கவும், அவை இருப்பதற்கும் போதுமான வசதிகளை விமான நிலைய அதிகாரிகள் தரவில்லை.
இவை குளிரூட்டப்பட்ட கொட்டில்களில், பாதுகாப்பான இடங்களில் பராமரிக்கப்பட வேண்டும் என்பது விமானப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பிரிவின் விதியாகும். ஆனால், சென்னை விமான நிலையத்தில் தேவையான குளிர் சாதனங்கள் இல்லாமல் இந்த நாய்கள், திறந்தவெளியில், குறுகலான கொட்டில்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.
ஞாயிறன்று இரவு, இரண்டு பெரிய நாய்கள் இருந்த கொட்டிலில், ராஜநாகம் ஒன்று புகுந்துள்ளது. நாய்கள் இடைவிடாமல் குரைப்பதைக் கேட்ட அதிகாரிகள், பின்னர் அவற்றை பத்திரமாக மீட்டனர். சென்னையில்தான் இத்தகைய அமைப்புகள் மிக மோசமாக உள்ளன என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.