மாத்தளை மனித புதைகுழிகளுக்கு கோத்தபாய ராஜபக்சவே பொறுப்பு: சிங்களத் தாய் சாட்சியம்
கொழும்பு: சிங்களவர் அதிகம் வசிக்கும் மாத்தளை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் மகிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபாய ராஜபக்சேவை குற்றம்சாட்டி சிங்கள பெண்மணி ஒருவர் அளித்துள்ள வாக்கு மூலம் அதிர வைத்திருக்கிறது.
மாத்தளைபகுதியில் மருத்துவமனை கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது தோண்ட தோண்ட மனித எலும்புக் கூடுகள் வெளிவந்தன. இந்த எலும்புக் கூடுகள் 1980-1989 ஆம் ஆண்டு காலப் பகுதியில் புதைக்கப்பட்டோரதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த கால கட்டத்தில் அப்பகுதியில் லெப்டினன் கேணலாக பதவி வகித்தவர் கோத்தபாய ராஜபக்சே. இதனால் அவர்தான் இந்தப் படுகொலைக்கு காரணமாக இருக்கலாம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அவர் தமது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:
1989ம் ஆண்டு டிசம்பர் 13ந் தேதி மாத்தளையில் உள்ள விஜய வித்தியாலய என்னும் பள்ளிக்கூடத்துக்கு அருகே இருந்த வீடுகளை, இராணுவம் சுற்றிவளைத்தது. அப்போது எனது இரண்டு மகன்களுக்கு மதிய உணவைக் கொடுத்துக்கொண்டு இருந்தேன். வீட்டுக்குள் நுழைந்த இராணுவத்தினர், மகன்கள் இருவரையும் பலவந்தமாக இழுத்துக்கொண்டு சென்றனர். அருகில் உள்ள ரெஸ்ட் ஹவுஸ் என்ற முகாமுக்கு முதலில் சென்றனர். இராணுவத்தின் வாகனத்துக்கு பின்னால் நான் ஓடிச் சென்று அவர்கள் அந்த முகாமிற்குள் செல்வதனை பார்த்தேன்.
மீண்டும் மறுநாள் அவர் சென்று மகன்கள் இருவரையும் பார்க்கவேண்டும் என்று மன்றாடினேன். ஆனால் முகாமுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அவர், உள்ளூர் அரசியல்வாதியான எக்கநாயக்கவை தொடர்புகொண்டேன். அவர் தனது செயலாளரை அந்த முகாமுக்கு அனுப்பி விசாரித்துவிட்டு, லெப்டினன் கேணல் கோத்தபாயவிடம் பேசிவிட்டதாகவும் இனி நீங்கள் உங்கள் மகனை பார்க்கலாம் என்றும் கூறினார். இதனை நம்பி நானும் அந்த முகாமுக்கு மீண்டும் சென்றேன். ஆனால் என்னைப் பார்க்க கோத்தபாய மறுத்துவிட்டார். மேலும் உங்களது இரண்டு மகன்களும் வேறு முகாமுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகக் கூறி அலைய வைத்தனர்.
இதுவரைக்கும் எனது மகன்கள் வீடு திரும்பவில்லை. மாத்தளையில் அவர்களோடு சிறையில் இருந்த சிலர் விடுதலையாகி வெளியே வந்த போது என் மகன்கள் ரெட் பானா சித்திரவதை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. ரெட் பானா முகாமில் ஜேவிபியினர் எனக் கருதி மகன்கள் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு மாத்தளையில் புதைக்கப்பட்டிருக்கலாம். தற்போது கண்டெடுக்கப்பட்ட 150 எலும்புக்கூடுகளுக்குள் மகன்களின் எலும்புக் கூடும் இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது.அதனால் டி.என்.ஏ. சோதனை நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
1989ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை இராணுவத்தில் இருந்து விலகிய கோத்தபாய ராஜபக்சே அமெரிக்கா சென்றுவிட்டார். அங்கே கிரீன் காட்டை எடுத்துக்கொண்ட அவர், தனது சகோதரரான மகிந்த ராஜபக்சே தீவிர அரசியலில் இறங்கிய பின்னரே இலங்கைக்கு திரும்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.