மாருதி மூலம் விமான தயாரிப்பில் ஈடுபடத் திட்டமிட்ட சஞ்சய் காந்தி-சோனியா!
விக்கிலீக்ஸ் தகவல்களின்படி 1970களில் ஸ்வீடன் நிறுவனமான சாப்-ஸ்கானியா இந்தியாவுக்கு போர் விமானங்களை விற்பனை செய்ய முன்வந்தது. இதில் ராஜிவ் காந்தி இடைத்தரகாக செயல்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் மாருதி கார் நிறுவனத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவரான இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி, சோனியா காந்தியுடன் இணைந்து விமானத் தயாரிப்பில் ஈடுபடவும் திட்டமிட்டிருந்தார் என்று புதிய விக்கிலீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் இருந்து வாஷிங்டனில் உள்ள அந் நாட்டு வெளியுறவுத்துறைக்கு அனுப்பப்பட்ட ரகசிய தகவல்களில் இந்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இதைத் தான் விக்கிலீக்ஸ் வெளியே கொண்டு வந்துள்ளது.
மாருதி-சஞ்சய் காந்தி குறித்து அதில் கூறப்பட்டுள்ளதாவது...
மாருதி கார் தொழிற்சாலையை நிறுவிய சஞ்சய் காந்தியும், ராஜிவின் மனைவியான சோனியா காந்தியும், கே.எல்.ஜலானும் 1970களின் மத்தியில் விமானத் தயாரிப்பில் இறங்கவும் திட்டமிட்டனர். இது தொடர்பாக சஞ்சய்-சோனியா சார்பில் அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனங்களிடம், அமெரிக்கத் தூதரகம் மூலமாக ஜலான் பேசினார்.
மாருதியின் துணை நிறுவனங்களாக இருந்த Maruti Heavy Vehicles மற்றும் Maruti Technical Services ஆகியவை மூலமாக விமானத் தயாரிப்பில் இறங்கும் திட்டத்தில் சஞ்சய் இருந்தார்.
இதற்காக அமெரிக்காவின் செஸ்னா மற்றும் பைபர் (Piper Aircraft) ஆகிய விமானத் தயாரிப்பு நிறுவனங்களுடனும், விமானங்களின் தகவல் தொடர்பு சேவையை வழங்கும் Collins Radio Company ஆகியவற்றுடனும் பேச்சு நடத்தினர்.
இதையடுத்து பைபர் விமான நிறுவனத்துக்கும் Maruti Technical Services நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கூட ஏற்பட்டது. ஆனால், இதையடுத்து அந்தத் திட்டம் வெளியே தெரியாத காரணங்களால் முடங்கிவிட்டது.
இவ்வாறு விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.