வெறும் ரவுடிதான், பயங்கரவாதி இல்லை...மாஜிஸ்திரேட் முன்பு பிளேடால் கிழித்த குற்றவாளி!
மதுரை:மதுரையில் உள்ள ஒரு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளி, திடீரென நீதிபதி முன்பு பிளேடால் தனது கையைக் கீறிக் கொண்டு நான் தீவிரவாதி இல்லை என்று கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை போலீஸார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர்.
கடந்த வருடம் மார்ச் 28ம் தேதி அத்வானி செல்லும் பாதையில் மதுரை அருகே ஆலம்பட்டி பாலத்தின் அடியில் வெடிகுண்டு வைத்த வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டவர் ஜாஹிர் உசேன்.
27 வயதான இவர் மதுரை திருநகர் தனக்கன்குளத்தைச் சேர்ந்தவர். இந்த வழக்கில் இன்று நீதிபதி பன்னீர் செல்வம் முன்பு இவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணை நடந்துகொண்டிருந்தபோது, திடீரென ஜாஹிர் உசேன், தான் வெறும் ரவுடிதான் என்றும், பயங்கரவாதி இல்லை என்றும் கூறி, இடது கையில் பிளேடால் அறுத்துக் கொண்டார். இதனால் பரபரப்புஏற்பட்டது.
உடனடியாக அவரை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர்.