சட்டசபையில் எந்த பிரச்சனை பற்றி பேசினாலும் திமுக மீது பழிபோடுவதா? கருணாநிதி
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக சட்டமன்றத்தில் நேற்றைய தினம் தென்பெண்ணையாற்று தண்ணீரைக் கர்நாடக அரசு திருப்பிவிடுவதைப் பற்றி ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எ.வ.வேலு கொடுத்து, அதன் மீது உறுப்பினர்கள் பேசி பொதுப்பணித்துறை அமைச்சர் பதில் அளித்திருக்கிறார். அப்போது அந்த அமைச்சரும், அவையை அமைதியாக நடத்திச் செல்லும் பொறுப்புமிக்க அவை முன்னவரும் எழுந்து தேவையில்லாமல் காவிரிப் பிரச்சினை பற்றியும், முல்லைப் பெரியாறு பற்றியும், இலங்கைப் பிரச்சினை பற்றியும் பேசி, அதில் திமுகவும், நானும் துரோகம் இழைத்து விட்டதாகப் பேசியிருக்கிறார்கள்.
அதற்குப் பதிலளிக்கத் தயாராக இருந்த முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரான துரைமுருகனையும் பேசவிடாமல் செய்திருக்கிறார்கள். அதிமுக அமைச்சர்கள் அனைவரைப் பற்றியும் நான் குறை கூறவில்லை. ஆனால் ஒரு சில அமைச்சர்கள், சட்டப்பேரவையில் பிரச்சினைகளை எழுப்புகிறார்கள். அதற்குப் பதில் சொல்ல எதிர்க்கட்சிகள் முயற்சி செய்தால் ஜனநாயக ரீதியாக வாய்ப்பளித்திட மறுத்து வெளியேற்றவும் செய்கிறார்கள்.
தமிழக சட்டப்பேரவையில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் காவிரிப் பிரச்சினையில் திமுக துரோகம் இழைத்துவிட்டது; இலங்கைப் பிரச்சினையிலே திமுக துரோகம் இழைத்துவிட்டது; முல்லைப் பெரியாறு பிரச்சினையில் திமுக துரோகம் இழைத்துவிட்டது; கச்சத்தீவில் திமுக துரோகம் செய்துவிட்டது என்று எந்தவித அடிப்படையுமின்றி, எதையும் முழுமையாக அறிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.