சென்னை: கடலில் குதித்து கோர்ட்டுக்கு ஓடி வந்த கேப்டன்.. கப்பல் மூழ்குவதாக தகவல்!
நேற்று நீதிபதி ஆர். சுதாகர், பிரச்சினைக்குரிய கப்பல்கள் தொடர்பான வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது பர்மாவைச் சேர்ந்த எதி கா என்பவர் நேரில் ஆஜரானார். அப்போது அவர் கூறுகையில், தனது ஓஎம்எஸ் ஏரினா கப்பல் சென்னை துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருப்பதாகவும், அது மூழ்கும் நிலையில் இருப்பதாகவும் கூறினார். அந்தக் கப்பலில் இருப்பது அபாயகரமானது என்பதால் தான் கடலில் குதித்து தப்பி வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், நான் 2 மாதங்களுக்கு முன்புதான் இந்தக் கப்பலில் பணியில் சேர்ந்தேன். அதில் டீசல் இல்லை. இதனால் என்ஜினால் இயங்க முடியவில்லை. ஏப்ரல் 3ம் தேதி முதல் மின்சாரமும் இல்லை. இதற்கு முன்பு இருந்த கப்பலின் உரிமையாளர் தேவையான பலசரக்கு சாமான்கள் உள்ளிட்டவற்றைக் கொடுத்து வந்தார். ஆனால் தற்போது அவையும் கூட தீர்ந்து போய் விட்டன. எனது ஊழியர்கள் பசியால் அழுகின்றனர், வாடுகின்றனற்.
பல நாட்களாக நாங்கள் சாப்பாடு கூட இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். அந்தக் கப்பல் தற்போது தகுதியான நிலையில் இல்லை. கடலில் மூழ்கும் நிலைக்குப் போய் விட்டது. எப்போது வேண்டுமானாலும் அது கடலில் மூழ்கும். எனது ஊழியர்கள் 14 பேரையும் உடனே கப்பலை விட்டு போய் விடுமாறு கூறி விட்டு நான் வந்து விட்டேன் என்றார் கா.
இதற்கிடையே, கேப்டன் கா, கப்பலின் தலைமை பொறியாளர் மற்று்ம் சில கப்பல் ஊழியர்கள் மீது வழக்குத் தொடரப் போவதாக சென்னை துறைமுகம் எச்சரித்துள்ளது. விதிகளுக்குப் புறம்பாக இவர்கள் கப்பலை விட்டு வெளியேறி போயுள்ளனர். மேலும் குடியேற்றப் பிரிவு அனுமதி இல்லாமல் இவர்கள் கப்பலை விட்டு வெளியேறியிருப்பது தவறாகும். இதுதொடர்பாக இவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று துறைமுக பொறுப்புக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் கேப்டன் கா இதுகுறித்துக் கூறுகையில்,எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. கப்பலுக்குள் தண்ணீர் புக ஆரம்பித்து விட்டது. எனது லேப்டாப்பிலிருந்து உதவி கோரி நான் தொடர்ந்து செய்தி அனுப்பி வந்தேன். ஆனால் ஒரு பதிலும் இல்லை. இதனால்தான் கப்பலை விட்டு வெளியேற நேரிட்டது என்றார்.
2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்த ஏரினா கப்பல் துறைமுகத்திற்குள் நின்று கொண்டிருக்கிரதாம். கடந்த 2011ல் தானே புயல் வந்து தாக்கியபோது இந்தக் கப்பலின் நங்கூரம் அறுந்து போய் பெரும் சிக்கலானது.