காங்கிரஸ் கட்சி எந்த நேரத்திலும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க தயார்: ஞானதேசிகன் அறிவிப்பு
திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாநில தலைவர் ஞானதேசிகன் எம்.பி. இன்று காலை வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது, ‘காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த மண்டல வாரியாக தமிழகம் முழுவதும் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. தற்போது நாடாளுமன்ற வாரியாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. கிராமங்கள் முழுவதும் கிராம கமிட்டி அமைக்க உள்ளோம். கிராமங்கள் முழுவதும் கொடியேற்றி கட்சியை பலப்படுத்துவோம்.
ஜூன் 15-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை பாதயாத்திரை நடத்த உள்ளோம். அப்போது மத்திய அரசின் சாதனைகளும், காங்கிரஸ் கட்சியின் சாதனைகளும் பொதுமக்களுக்கு விளக்க உள்ளோம். அதோடு பூரண மதுவிலக்கு குறித்து பிரச்சாரம் செய்வோம்.
இலங்கை பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி அன்று முதல் இன்று வரை ஒரே நிலைப்பாடுடன் உள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் சூழ்நிலைகேற்ப மாறிமாறி தங்கள் நிலைபாட்டுகளை மாற்றி வருகிறது. இலங்கை பிரச்சினையில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயாராக உள்ளது.
இலங்கை பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் நான் பேசினேன். இலங்கை தமிழர்களுக்கு சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதற்காக ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 1000 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. தற்போது இலங்கைக்கு சென்றுள்ள 5 எம்.பி.க்கள் குழுவை மத்திய அரசு அனுப்பவில்லை. அவர்களை தொழில் அதிபர் கூட்டமைப்பு அனுப்பியுள்ளது.
தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட இலங்கை தூதர் மற்றும் துணை தூதரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சிறைபிடிக்கப்பட்டுள்ள ஒரு பகுதி மீனவர்கள் நாளை விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம். மீனவர்கள் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு இலங்கை, தமிழக மீனவர்களை அழைத்து பேச வேண்டும். யாரும் எல்லை தாண்டி மீன் பிடிக்கக்கூடாது. அதுவே நிரந்தர தீர்வாக இருக்கும்.
இந்த பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் நிரந்தர தீர்வு காணப்படும். தமிழக சட்டசபையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்படுவது வேதனையாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் அதை சந்திப்பதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது.
தமிழகத்தில் நிலவும் மின்பிரச்சினையை தீர்க்க தமிழக மின்சார துறை அமைச்சர், மத்திய மின்சார துறை அமைச்சரை சந்தித்து பேசினால் நல்ல முடிவு கிடைக்கும்.
திண்டுக்கல்-தஞ்சாவூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தியதற்கு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' , என இவ்வாறு அவர் பேசினார்.