நான் தான் பஸ்ஸை முன்னாடி நிறுத்துவேன்: மேட்டூரில் கர்நாடக-தமிழக அரசு பஸ் டிரைவர்கள் மோதல்
சேலம்: மேட்டூர் பேருந்து நிலையத்தில் பேருந்தை யார் முன்னால் நிறுத்துவது என்பது தொடர்பாக தமிழக மற்றும் கர்நாடக போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுநர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
இன்று யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலைக்கு மேட்டூர் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் இருந்து கடந்த 3 நாட்களாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கர்நாடகா சார்பில் 50 பேருந்துகளும், தமிழகம் சார்பில் 50 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
கர்நாடக போக்குவரத்து கழகம் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து கழக சிறப்பு பேருந்துகள் மேட்டூர் பேருந்து நிலையம் அருகே சாலையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. நேற்று முன்தினம் காலை பேருந்து நிலையத்தில் யார் பேருந்தை முன்னால் நிறுத்தவது என்பது குறித்து கர்நாடக பேருந்து ஓட்டுநர் மனோகரன் மற்றும் தமிழக அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் முருகேசன், ராமசாமி ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இது குறித்து அறிந்த கர்நாடக அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மேட்டூர் காவல் நிலையத்திற்கு அருகே குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இந்நிலையில் இரு மாநில அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர்களும் சந்தித்து பேசி இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர்.