அழிவின் பிடியில் சீனா?
பெய்ஜிங்: சமீபத்தில் சீனாவைப் பற்றிய செய்திகள் அனைத்தும் பீதியையே கிளப்புகின்றன. 16,000 பன்றிகள் சாங்காய் நகரில் உள்ள வாம்போ ஆற்றில் செத்து மிதந்தன, பெய்ஜிங் நகரின் காற்று மாசுபாடு அறிக்கை, சீர்கெட்ட சூழ்நிலையால் சீனாவில் மக்களின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது என பலப்பல...
சமீபத்தில் இந்த வரிசையில் பறவைக்காய்ச்சலும் சேர்ந்து, 7 பேரை பலிவாங்கியது. அமெரிக்க நாட்டின் நலவாழ்வுத்துறை பறவைக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து தயாரிப்பை முடுக்கி விட்டுள்ளது.
உமிழும் நாடு...
சீனா தான் உலகிலேயே சுகாதாரக்கேடுள்ள 16 முதல் 20 நகரங்களைக் கொண்ட நாடு. மேலும் அதிகப்படியான பச்சைஇல்ல வாய்க்களை உமிழும் நாடு என்ற பெருமையும் அதனையே சேரும்.
எல்லை கடந்த மாசு...
சீனாவின் இந்த சுற்றுச்சூழல் மாசுபாடு, அதன் எல்லையை கடந்து விட்டதுதான் உலக நாடுகளின் தற்போதைய பெருங்கவலை. வளரும் நாடுகளில் இப்படித்தான் இருக்கும் என சப்பைக்கட்டு கட்டுகிறார்கள் சீனத்தலைவர்கள்.
நோ... தூய்மையான காற்று...
கணக்கெடுப்பின் படி, சீனாவில் உள்ள 560 இலட்சக் கிராமங்களில், ஒரு சதவீதத்தில் மட்டுமே சுவாசிக்க தூய்மையான காற்று உள்ளதாம். மார்ச் 2012ல் எடுக்கப்பட்ட சர்வேயில், பெய்ஜிங்கில் ஒரு கனசதுர மீட்டரில் 469 மைக்ரோகிராம் கெட்ட தூசுக்கள் கலந்துள்ளதாம். லாஸ் ஏஞ்சல்ஸ்சில் 43 மைக்ரோகிராமாம்.
பெருக்கம் போலவே... இறப்பும் ஜாஸ்தி
சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் சீனாவில் 2010ல் 1.2 மில்லியன் மக்கள் இறந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
வாகன நெருக்கம்...
நிலக்கரி எரிக்கும் மின்னுற்பத்தி நிலையங்கள் மூலம் அதிகப்படியான சக்தி சீன நகரங்களில் பயன் படுத்தப்படுகிறது. சீனாவில், தற்போது 90 மில்லியனாக உள்ள வாகனங்களின் எண்ணிக்கை, 2030க்குள் 400 மில்லியனைத் தாண்டி விடும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
டீசல் கழிவு அதிகம்...
அமெரிக்காவை விட 23 மடங்கு அதிகமான கழிவை, டீசல் மூலம் சீனா வெளிவிடுகிறதாம். இதனால் அமில மழைக்கு அதிகப்படியான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை சீர்குலைவு...
கருப்புக்கார்பன் புகைக்கரி மூலம் சூரிய வெளிச்சம் கறுப்பாக மாறலாம், தட்பவெப்பம் அதிகரிக்கலாம், பசிபிக் விளிம்பு நகரங்களில் வானிலை சீர்குலையும் அபாயம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது சீனாவிற்கு.
தண்ணீர் பஞ்சம்...
எதிர்காலத்தில் குடிக்க பீர் கிடைக்கும் ஆனால் காசு கொடுத்தாலும் நீர் கிடைக்காது என்ற மார்க்கின் கூற்று ஏற்கனவே மெய்யாகி வருகிறது. உலக மக்கள் தொகையில் 40 சதவீதத்தை கொண்டுள்ள சீனாவும், இந்தியாவும் சுத்தநீர் கையிருப்பில் வெறும் 10 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உயிர் உள்ளவரை போராடுவோம்...
உலக 50000 நீரணைகளில், பாதிக்கும் அதிகமான அணைகள் சீனாவில் தான் உள்ளன். சீன முன்னாள் நீர் வள அமைச்சர் வான் ‘ஒவ்வொரு துளி நீருக்காகவும் உயிர் உள்ளவரை போராடுங்கள்' என்பதே சீனாவின் நீர் குறித்த தாரகமந்திரம் என தெரிவித்துள்ளார்.