பாகிஸ்தானில் போலியோ மருந்து கொடுத்ததால் போலீஸ்காரர் சுட்டுக்கொலை: மற்றொருவர் கவலைக்கிடம்
பெஷாவர்: பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து போடும் ஊழியர்களுக்கு பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
தொடர்ந்து, பாகிஸ்தானில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் ஊழியர்கள் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது என்று பழமைவாதிகள் கூறிவருகின்றனர்.
அதேசமயம் சொட்டு மருந்து கொடுப்பதாக கூறி அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானை உளவு பார்ப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சொட்டு மருந்து முகாம்களை தாக்கிவருகின்றனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இதுவரையில் ஏராளமான பணியாளர்கள் பலியாகியிருக்கின்றனர். பாதுகாப்புக்கு செல்லும் போலீசாரும் கொல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், வடமேற்கு பாகிஸ்தானில் கைபர் போக்துங்வா மாகாணம், மார்டான் மாவட்டத்தில் பெண் ஊழியர்கள் நேற்று சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பாதுகாப்பாக சென்ற போலீஸ்காரர்கள் மீது மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் ஒரு போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொரு போலீஸ்காரர் காயம் அடைந்தார். பெண் ஊழியர்கள் வீட்டிற்குள் சென்று குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கிக்கொண்டிருந்ததால் அவர்கள் உயிர் தப்பினர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இந்த தாக்குதலை இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
உலகில் இன்னமும் போலியோ நோய் தோன்றும் 3 நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. இதனால் போலியோவை ஒழிக்க தொடர்ந்து சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. ஆனால், தீவிரவாதிகளின் மிரட்டலால் சொட்டு மருந்து வழங்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.