இந்தியாவா இலங்கையில் தீவிரவாதத்தை பரப்பியது... கோத்தபயாவுக்கு நாராயணசாமி கண்டனம்
சென்னை: இலங்கையின் உள்நாட்டுத் தீவிரவாதத்தை இந்தியா ஊக்குவித்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்த கருத்துக்கு, அமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்தார்.
இந்தியா பொறுப்புடன் நடந்துகொண்டிருந்தால், விடுதலைப்புலிகளுடனான போர் 30 ஆண்டு நடந்திருக்காது என இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தம்பியும், அந்த நாட்டின் ராணுவத்துறை செயலாளருமான கோத்தபயா ராஜபக்சே குற்றம் சாட்டியுள்ளார். இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் நாராயணசாமி, சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது:
இலங்கையில் தீவிரவாதத்தை இந்தியா தான் தூண்டிவிட்டது என்று கேத்தபாயராஜபக்ச கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று. உலகத்தில் எந்தப் பகுதியில் தமிழர்கள் இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை. அதனை மத்திய அரசு எப்போதுமே சிறப்பாக செய்து வருகிறது.
ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமராக இருந்த போது கூட ஈழத் தமிழர்கள் நலனுக்காக அமைதிப்படையை அனுப்பினார் என்று நாராயணசாமி கூறினார்.
மேலும், இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதற்காக, கடற்பகுதியில் கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றும் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.