இந்தியா முழுவதும் 26 மாவட்டங்கள் நக்சல்களின் ஆதிக்கம்: மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் 7 மாநிலங்களில் உள்ள 26 மாவட்டங்கள் நக்சலைட்டுகள் ஆதிகம் நிறைந்தவை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இந்தியா முழுவதும் நக்சலைட்டுகள் தாக்குதலுக்கு 600 பேர்வரை கொல்லப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை விட உள்நாட்டில் உள்ள தீவிரவாதிகளினால் மிகப்பெரிய அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நக்சல்களினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் பற்றிய விபரம்:
7 மாவட்டங்கள் 26 மாவட்டங்கள்
80 சதவீதம் வன்முறையை சந்தித்துள்ள சதீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, பீகார், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 26 மாவட்டங்கள் நக்சலைட்களில் வன்முறையால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
சட்டீஸ்கர் முதலிடம்
நக்சலைட்களின் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக சதீஸ்கர் முதல் இடம் வகிக்கிறது. இங்குள்ள பஸ்டர், பிஜப்பூர், தண்டேவாடா, கன்கர், கொண்டகவுன், நாராயண்பூர், ராஜ்நந்த்கவுன், சுக்மா மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
நக்சல்கள் வன்முறை
நாட்டில் உள்ள 64 மாவட்டங்களின் 270 காவல் நிலைய எல்லைக்குள் நக்சலைட்களின் வன்முறை தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட மக்கள் நக்சலைட்களின் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில்...
இதேபோல், ஜார்கண்ட் மாநிலத்தின் கர்வா, கிரிதி, கும்லா, குண்தி, லதேகர், பாலமு, சிம்டேகா, மேற்கு சிங்பம் மாவட்டங்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
பீகார் - ஆந்திரா
பீகாரின் அவுரங்காபாத், கயா, ஜமுய் மற்றும் ஒடிசாவின் கோரக்புட், மல்காங்கிரி, போலாங்கிர், ஆந்திராவின் கம்மம், விசாகப்பட்டினம், மகாராஷ்டிராவின் கட்சிரோலி, மேற்கு வங்காளத்தின் மிட்னபூர் உள்ளிட்ட மாவட்டங்களும் நக்சல்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளாகவும், அதிக பாதிப்புகளை சந்தித்த பகுதிகளாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.