இரட்டை கொலை: மதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சதன் திருமலைக்குமார் மீது வழக்கு
நெல்லை: நெல்லை அருகே நடந்த இரட்டை கொலை தொடர்பாக ம.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ சதன் திருமலை குமார் உட்பட 16 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடையநல்லூரை அடுத்த சிங்கிலிபட்டி கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி, முருகேசன் இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதன்காரணமாக காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது இருதரப்பினரும் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பழனிச்சாமி தரப்பை சேர்ந்த குமார், கனி ஆகியோரை ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களால் நேற்று வெட்டி கொன்றது. அந்த கொலை சம்பவத்தை தடுக்க முயன்ற செல்லதுரை மற்றும் பிரவீன்குமாருக்கு பல இடங்களில் வெட்டு விழுந்தது.
பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் முருகேசன் தரப்பை சேர்ந்த வாசுதேவ நல்லூர் முன்னாள் ம.தி.மு.க. எம்.எல்.ஏ. சதன் திருமலை குமார் உள்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.