கூடங்குளத்தில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம்அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிந்துரை
டெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையம் அமைப்பதற்கான , கடலோர கண்காணிப்புப் பகுதி ஒப்புதலை வழங்க மத்திய சூற்றுச்சூழல் அமைச்சகத்தின் உயர் நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்த ஆண்டு அளித்த விளக்கத்தில், சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர், அணுமின் நிலையத்தில் குளிர்விக்கும் பணிக்காக பயன்படுத்தப்படும்.
பின்னர் அந்த நீர் மீண்டும் கடலுக்குள் விடப்படும். இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டது.
4 உள்பிரிவுகள்:
இந்த சுத்திகரிப்பு நிலையம் கூடங்குளம் பகுதி கடலில் இருந்து நீரை எடுத்து, அதனை சுத்திகரித்து, அணுமின் நிலையத் தேவைக்காக வழங்கும். இதில் மொத்தம் 4 சுத்திகரிப்பு உள்பிரிவுகள் உண்டு.
செயல்படும் திறன்:
ஒவ்வொரு பிரிவும் ஒரு மணி நேரத்தில் தலா 106.66 கன மீட்டர் நீரை கையாளும் திறனுடையது. இதில் மூன்று மட்டுமே செயல்படும். ஒன்று அவசர காலத்துக்கு பயன்படுத்தப்படும்.
கழிவுகள்:
இதேபோல இந்திய அணுசக்தி நிறுவனம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அணுஉலையில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் கழிவுகள் கடலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதில் யுரேனியம், புளூட்டோனியம் கழிவுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
பரிந்துரை:
சமீபத்தில் நடைபெற்ற கடலோர கண்காணிப்புப் பிரிவின் நிபுணர்களின் ஆய்வுக் கூட்டத்தில், இத்திட்டம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தமிழக கடலோர மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் உள்பட்டதாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
ஆய்வு:
அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுகள் கடலில் கலக்கும் இடத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.