பாபா சாகேப் அம்பேத்கர் 123 வது பிறந்தநாள்… தலைவர்கள் அஞ்சலி
சென்னை: டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கார் அவர்களின் 123 வது பிறந்த நாள் ஏப்ரல் 14ம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா, வைகோ, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி-பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார்.
இந்திய நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். அவரது தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது.
அவரது பிறந்த நாள் ஆண்டு தோறும் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. நேற்றைய தினம் தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்பேத்கரின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
வைகோ மலர் அஞ்சலி
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை துறைமுக வாயிலில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் மாவட்டச் செயலாளர்கள் வடசென்னை சு.ஜீவன், தென் சென்னை வேளச்சேரி மணிமாறன், அமைப்புச் செயலாளர் சீமா பஷீர், தேர்தல் பணிச் செயலாளர் ந.மனோகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மு.க.ஸ்டாலின் மாலை
சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், சற்குணபாண்டியன் உள்பட முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விஜயகாந்த் மலர் அஞ்சலி
கோயம்பேடு கட்சி தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் படத்துக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், கோயம்பேடு அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
சரத்குமார் மரியாதை
துறைமுகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மாலை அணிவித்தனர்.
சென்னை கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலைக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.