சேலம் அருகே காவலாளியை கொடூரமாக தாக்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி!
சேலம்: ஆத்தூர் வீரகனூர் பேருந்து நிலையம் அருகே ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஏடிஎம் மையத்தில் காவலாளியை கொடூரமாகத் தாக்கி கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீரகனூர் பேருந்து நிலையம் அருகே 50 மீட்டர் தொலைவில் ஸ்டேட் வங்கி கிளை இருக்கிறது .அங்கு ஏ.டி.எம். மையமும் இருக்கிறது. இப்பகுதியில் எப்போதும் ஆள்நடமாட்டம் இருக்கும். இங்கு நேற்று இரவு பெருமாள் எனற காவலாளி பணியில் இருந்தார். நள்ளிரவு நேரத்தில் ஒரு கும்பல் திடீரென ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்து பெருமாளை சரமாரியாக தாக்கியது. இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.
பின்னர் அக்கும்பல் ஏடிஎம் மைய சிசிடிவி காமிரா வயரை துண்டித்து கதவுகளை உடைத்து உள்ளே புகுந்தனர். ஏ.டி.எம். இயந்திரத்தை நீண்ட நேரமாக உடைக்க முயன்றும் பலன் இல்லாமல் போகவே அக்கும்பல் தப்பி ஓடியது. அந்த வழியே சென்றவர்கள் காவலாளி ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காவலாளியின் மூளை வெளியே வரும் அளவுக்கு கொடூரமான ஆயுதங்களால் தாக்கியிருக்கின்றனர்.
இச்சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.