ஈரோடு மாவட்ட திமுகவில் விஸ்வரூபமெடுக்கிறார் முத்துசாமி- மா.செ.பதவிக்கு போட்டியிடுகிறார்
ஈரோடு மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுகவில் மிகவும் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்தவர் முத்துசாமி. 30 வயதிலேயே முத்துசாமியை அமைச்சராக்கியவர். எம்.ஜி.ஆர். காலத்தில் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தவர். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகும் ஜெயலலிதா தலைமையை ஏற்று அதிமுகவில் நீடித்தார். ஆனால் முத்துசாமியின் ஜூனியரான செங்கோட்டையனின் விஸ்வரூப வளர்ச்சியில் முத்துசாமி ஓரங்கட்டப்பட்டுவிட திமுகவில் ஐக்கியமானார்.
ஆனால் ஈரோடு மாவட்ட திமுகவை முன்னாள் அமைச்சர் என்.கே.கே. பெரியசாமி, அவரது மகன் என்.கே.பி. ராஜா இருவரும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எத்தனையோ வழக்கு விவகாரங்களில் என்.கே.பி.ராஜா சிக்கி கட்சியை நீக்கிய போதும் கூட மீண்டும் மீண்டும் அவர் சேர்க்கப்பட்டது திமுக தொண்டர்களை முகம் சுளிக்க வைத்தது.
இந்நிலையில் முத்துசாமி திமுகவில் இணைய ராஜா மீதான அதிருப்தியாளர்கள் முத்துசாமியுடன் கைகோர்த்தனர். இதனால் ஈரோடு மாவட்ட திமுகவில் வலுவான இரண்டு அதிருப்தி அணிகள் செயல்படத் தொடங்கின.
இந்நிலையில்தான் கடந்த 22ம் தேதி ஈரோடு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராஜா- முத்துசாமி இடையேயான மோதல் பகிரங்கமாக வெடிக்க ஒரு கட்டத்தில் முத்துசாமியை பார்த்து மாவட்டச் செயலாளர் தேர்தலில் நீங்கள் போட்டியிடுங்கள் பார்த்துவிடுவோம் என்று ராஜா சவால்விட்டிருக்கிறார்.
இதற்குத்தான் காத்திருந்தேன் என்பது போல முத்துசாமி தமது ஆதரவாளர்களை அழைத்து ரகசிய ஆலோசனை நடத்த ஆரம்பித்துவிட்டார். தனது உறவினரின் தோட்டத்தில் கடந்த 7ம் தேதி இரவு ரகசிய ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் ஒரு மாநாட்டையே நடத்திவிட்டார் முத்துசாமி.
அப்போது, இனி நான் மீண்டும் ஈரோட்டிலேயே நிரந்தரமாக வசிக்கப் போகிறேன். சென்ற 22ம் தேதி மாவட்ட செயற்குழுவில் என்னைப் பார்த்து என்னை எதிர்த்து நீங்கள் மாவட்டச் செயலாளருக்கு போட்டியிடுங்கள். முத்துச்சாமியா? ராஜாவா பார்த்துவிடுவோம் என்றார். அந்த சவாலை ஏற்றப வரும் உட்கட்சி தேர்தலில் நான் மாவட்டச் செயலாளருக்கு போட்டியிடப் போகிறேன் என்றார்.
ஆனால் ராஜாவோ, நான்தான் முத்துச்சாமியை மாவட்டச் செயலாளராக நிற்கச் சொன்னேன். அவரிடம் சவால் விட்டேன் என்பது தவறு. முத்துச்சாமி இதே பொய்யைத் திரும்பத் திரும்ப கூறுகிறார். கட்சித் தேர்தல் வரட்டும். முத்துச்சாமி போட்டி போட்டியிடட்டும். நானா, அவரா என்று அப்போது பார்ப்போம் என்றார்.
ஆக ஈரோடு மாவட்ட திமுகவில் திகுதிகுவென பற்றி எரிகிறது உட்கட்சி பூசல்!!