இடைவிடாமல் 62 மணி நேரம் டி.வி. நிகழ்ச்சி: 'கின்னஸ்' சாதனை படைத்த நேபாள நாட்டுக்காரர்
நேபாள நாட்டை சேர்ந்தவர் ரபி லமிச்சானே (36). அமெரிக்காவில் உள்ள சங்கிலித் தொடர் உணவகத்தில் பணியாற்றும் இவர் தொடர்ந்து 62 மணி நேரம் டி.வி.யில் நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை புத்தகமான கின்னஸ்-சில் இடம் பிடித்துள்ளார்.
'புத்தர் நேபாளத்தில் பிறந்தார்' என்ற தலைப்பில் இவர் நடத்திய தொடர் நிகழ்ச்சியில் நேபாள முன்னாள் பிரதமர், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், விளையாட்டு துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் என பல துறையை சேர்ந்தவர்களும் பங்கேற்று தங்களது கருத்துகளை வெளிப்படுத்தினர்.
கடந்த 11ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த சாதனை நிகழ்ச்சியை 62 மணி நேரம் 11 நிமிடங்களுக்கு பிறகு இவர் நிறைவு செய்தார்.
கின்னஸ் விதிமுறைகளின்படி, ஒரு மணி நேரத்திற்கு 5 நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். எனினும், ரபி லமிச்சானே அடிக்கடி ஓய்வெடுக்காமல் பல 5 நிமிடங்களை சேமித்துக்கொண்டு நீண்ட நேரம் ஓய்வெடுத்து இந்த சாதனையை நிகழ்த்தினார்.
சாதனையின் நிறைவில் நேபாள உடை அணிந்து ரபி காணப்பட்டார். பின்னர் கின்னஸ் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கி ரவியைப் பாராட்டினர்.
2011ம் ஆண்டு உக்ரைன் நாட்டை சேர்ந்த டி.வி. தொகுப்பாளர்கள் 52 மணி நேரம் தொடர் நிகழ்ச்சி நடத்தியதுதான் முந்தைய சாதனையாக கருதப்பட்டது.