கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம்!- டெசோ
சென்னை: இந்தியா - இலங்கைக்கிடையிலான கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், அந்தத் தீவு இந்தியாவின் ஒரு பகுதி எனப் பிரகடனப்படுத்தவும், உச்சநீதிமன்றத்தை அணுகப் போவதாக கருணாநிதி தலைமையிலான டெசோ அமைப்பு அறிவித்துள்ளது.
டெசோ அமைப்பின் சார்பில், கலந்துரையாடல் கூட்டம், அறிவாலயத்தில் நேற்று நடந்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். பொதுச் செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் மற்றும் டெசோ உறுப்பினர்கள் கி வீரமணி, தொல் திருமாவளவன், சுப வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...
* கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி. இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும், வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், 368வது பிரிவின்படி, பார்லிமென்டின் பரிசீலனைக்கு வைத்து, சட்டம் இயற்ற வேண்டும். கச்சத்தீவைப் பொறுத்தவரை, அப்படி எந்தவொரு சட்டமும், இதுவரை நிறைவேற்றபடாததால், கச்சத்தீவை இலங்கைக்கு, ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது, அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது.
* எனவே, 1974ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத்தீவு, இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், உச்சநீதி மன்றத்தை டெசோ அமைப்பு அணுகும்.
* காரைக்காலைச் சேர்ந்த, 26 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால், கைது செய்யப்பட்டு, அவர்களின் சிறைக்காவல், இம்மாதம், 19ம்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளில், மத்திய அரசு ஈடுபட வேண்டும்.
* டெசோ தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம், இம்மாதம் 24ம்தேதி, திருவான்மியூரில் நடைபெறவுள்ளது. அதில், கருணாநிதி மற்றும் டெசோ உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கச்சத்தீவை திரும்பப் பெற முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ஏற்கெனவே 2011-ல் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.