அமெரிக்கா: பாஸ்டன் நகரில் இரு குண்டு வெடிப்புகள்- 3 பேர் பலி; மேலும் 2 குண்டுகள் கண்டுபிடிப்பு
பாஸ்டன்: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் அடுத்தடுத்து நடந்த இரு குண்டுவெடிப்புகளில் 3 பேர் பலியாயினர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகரில் இன்று நடந்த மாராதான் போட்டியைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடந்தது. மாராதான் போட்டி முடிவடையும் இடத்தில் இந்த இரு குண்டுகளும் வைக்கப்பட்டிருந்தன.
இந்த மாராதான் போட்டியில் சுமார் 16,000 பொது மக்கள் பங்கேற்றிருந்தனர். பாய்ல்ஸ்டன் தெருவில் இந்தப் போட்டி முடிவடைந்த நிலையில், அங்கு மக்கள் குவிந்திருந்தபோது அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன.
இதில் ஒரு 8 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 137 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதல் 17 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதையடுத்து போலீசார் அங்கு நடத்திய சோதனையில் மேலும் 2 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டன.