அமெரிக்காவின் புதிய விசா திட்டம்: இன்போஸிஸ், விப்ரோ, டிசிஎஸ்ஸுக்கு கடும் பாதிப்பு!
வாஷிங்டன்(யு.எஸ்). புதிய ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள் இந்திய ஐடி நிறுவன்ங்களுக்கு அமெரிக்காவில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் ஹெச்1பி ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும் வாய்ப்பும் இருக்கிறது.
ஒபாமா சபதம்
அதிபர் ஒபாமா இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதும் குடியேற்ற முறை சட்டத்தை சீரமைக்க உறுதி பூண்டார். அவரது எண்ணத்திற்கு வடிவம் கொடுக்கும் வகையில் குடியரசுக் கட்சி மற்றும் ஜன நாயகக் கட்சியை சார்ந்த எட்டு செனட்டர்கள் குழு சில மாதங்களாக புதிய விசா மற்றும் க்ரீன்கார்டுக்காக சட்ட திருத்தம் குறித்து ஆராய்ந்து, தீர்மானம் வரையறுத்துள்ளனர்.
இந்த வார இறுதியில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் இந்த தீர்மான நகல் வெளியிடப்பட்டுள்ளது. தீர்மான நகலை செனட்டர்கள் ஜான் மெக்கெய்ன், சக் ஷூமர் அதிபர் ஒபாமாவிடம் வழங்கி, விவரித்தார்கள். தீர்மானத்தை பாராளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்றி சட்ட வடிவம் கொடுக்குமாறு ஒபாமா அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
சட்டபூர்வ குடியேற்ற நடைமுறையில் சீர்திருத்தம்
பதினோரு மில்லியன் மக்கள் சட்டத்துக்கு புறம்பாக அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அவர்களை திருப்பி அனுப்புவது சாத்தியமில்லையாதலால், சட்டபூர்வமாக குடியேற்ற உரிமைகள் கொடுப்பது குறித்துதான் இந்த தீர்மானத்தின் அம்சமாகும்.
அதே வேளையில் சட்டபூர்வமாக வேலைவாய்ப்பு, குடும்ப உறுப்பினர், தொழில் முனைவோர் என்ற வகையில் குடியேற்ற உரிமைக்காக காத்திருப்பவர்கள் எண்ணிக்கையும் அரை மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. மேலும் நடைமுறையில் இருக்கும் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன.
ஹெச் 1 பி விசா எண்ணிக்கை அதிகரிப்பு
முதல் கட்டமாக ஹெச்1 பி விசாவிற்கான நடைமுறைகளை மாற்றி அமைக்க பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இந்த தீர்மானம் நிறைவேறினால், ஹெச் 1 பி விசாவில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு , நடைமுறையில் இருக்கும் சம்பளத்தை விட அதிகமாகக் கொடுக்க வேண்டும். மேலும் விசா விண்ணப்பிக்கும் முன்பாக, அமெரிக்க குடிமக்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் வேலைவாய்ப்பு விவரங்களை வெளியிட வேண்டும். அதற்கு யாரேனும் விண்ணப்பிக்கும் பட்சத்தில், குறிப்பிடப்பட்டுள்ள அதிகப்படியான சம்பளத்தில் அவர்களை வேலையில் அமர்த்த வேண்டும். க்ரீன்கார்டுகளுக்கு மட்டுமே இந்த நடைமுறை அமலில் இருக்கிறது.
கூடுதல் சம்பளம் என்பது மிகவும் புதிய அமசமாகும். ஹெச்1 பி ஊழியர்கள் ஒரு நிறுவனத்திலிருந்து வெளியேறி 60 நாட்களுக்குள் அடுத்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து கொள்ள முடியும். இந்த சீர்திருத்தங்கள் மூலம் குறைந்த சம்பளத்தில் இந்தியாவிலிருந்து ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை ஹெச்1 பி, எல்1 விசாக்களில் அழைத்து வருவதை தடுத்து நிறுத்த முடியும் என்று குடியேற்ற விவகார
வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ஆனாலும் 65 ஆயிரம் ஹெச்1 பி விசாக்களின் எண்ணிக்கை 110 ஆயிரமாக உயர்த்தப்ப்ட உள்ளது. தேவை அதிகமாகும் பட்சத்தில் 180 ஆயிரம் வரை இதை உயர்த்தவும் வழி வகை செய்யப்படுகிறது. கூகுள், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவன்ங்கள் விசா எண்ணிக்கை அதிகரிப்பால் அதிக பயனடைய வாய்ப்புள்ளது.
இந்திய ஐடி நிறுவன்ங்களுக்கு பாதிப்பு
நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 75 சதவீத்த்திற்கும் அதிகமாக ஹெச்1பி விசாக்களால் நிரப்ப்பட்டிருந்தால், மேற்கொண்டு ஹெச்1 விசாக்கள் அனுமதிக்கப்பட மாட்டாது, மேலும் அந்த எண்ணிக்கை 30 முதல் 50 சதவீதம் வரை இருந்தால், 5000 முதல் 10000 டாலர் வீதம் ஒவ்வொரு ஹெச்1 பி விசா ஊழியர்களுக்கும் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இதன் மூலம் இந்திய ஐடி நிறுவனங்கள் தங்கள் அமெரிக்க கிளைகளின் ஊழியர்களுக்காக சம்பளம், விசா என அதிக் செலவு செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அதிக இந்தியர்களை பணியில் அமர்த்தும் இன்போஸிஸ், விப்ரோ, டிசிஎஸ் போன்ற நிறுவனங்களுக்கு இது தலைவலிதான். 50 ஊழியர்களுக்கும் குறைவாக உள்ள நிறுவன்ங்களுக்கு சில விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான விஷயமாகவும் கருதப்படுகிறது.
விரைவான க்ரீன்கார்டுகள்
இதுவரையிலும் ஆராய்ச்சி உள்ளிட்ட சிறப்பு தகுதி உள்ளவர்களுக்கான 'இபி1' வகை க்ரீன்கார்டுகளுக்கு ஆண்டு எண்ணிக்கை கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அடிப்படையில் உள்ள எண்ணிக்கை 'இபி2' , 'இபி3' வகைகளுக்கு தலா நாற்பது சதவீதமாக பிரித்தளிக்கப்படுகிறது. 'இபி4' க்கும், 'இபி5' க்கும் தலா பத்து சதவீதமாக இது நிர்ணயிக்கப்படுகிறது. இதுவரையிலும், மனைவி, குழந்தைகளுக்கான க்ரீன் கார்டுகளும் இந்த எண்ணிக்கையில் கணக்கிடப்பட்டு வந்தது.
இனிமேல் ஆண்டு எண்ணிக்கையில் குடும்ப உறுப்பினர்கள் விலக்கப்படுகிறார்கள். இதன் மூலம் பிரதான விண்ணப்பதாரர் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார் என்பதால், காத்திருப்பு நேரம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இபி2, இபி3 வகையில் காத்திருக்கும் சுமார் 100 ஆயிரம் இந்தியர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக அமையும்.
ஆண்டு தோறும் லாட்டரி மூலம் (இந்தியர்களுக்கு அல்ல) தேர்ந்தெடுக்கப்படும் 50 ஆயிரம் க்ரீன் கார்டுகளும் இனிமேல் இருக்காது. குடும்ப உறுப்பினர்கள் அடிப்படையில், அண்ணன், தம்பி உள்ளிட்ட உறவுகளுக்கும் க்ரீன் கார்டுகள் நிறுத்தப்படும். 31 வயதுக்குட்பட்டவர்கள், குழந்தைகள், மனைவி, பெற்றோர்கள் மட்டுமே குடும்ப உறுப்பினர் அடிப்படையில் க்ரீன்கார்டு பெற முடியும்.
அறிவியல் மாணவர்களுக்கு முன்னுரிமை
STEM எனப்படும் Science Technology Engineering Mathematics பிரிவுகளில் மேல் படிப்பு படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு குடியேற்ற உரிமை விரைவில் கிடைக்கவும் வழி செய்யப்படுகிறது. இதன் மூலம் வெளி நாட்டு மாணவர்களை அமெரிக்க பல்கலைகழகங்களுக்கு அதிக அளவில் ஈர்க்க முடியும் என தெரிகிறது. இந்தியாவிலிருந்து செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும்.
கனடா நாட்டைப் போல் தகுதி அடிப்படையிலான கிரீன்காடு திட்டங்களும் 2018 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
விவசாய வேலைக்காக தனி தற்காலிக விசா பிரிவும் அமல்படுத்தப்பட உள்ளது. பதினோரு மில்லியன் சட்டபூர்வமற்ற குடியேறியவர்களுக்கும் நீண்டகால திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது
தீர்மானம் நிறைவேறுமா?
நடந்து முடிந்த தேர்தலில் லத்தீன் இன மக்கள் ஒட்டு மொத்மாக அதிபர் ஒபாமாவுக்கு வாக்களித்தனர். பதினோரு மில்லியன் மக்களில் பெரும்பான்மையானோர் லத்தீன் இன மக்களே. அவர்களுக்கு சட்டப்பூர்வ உரிமை பெற்றுத் தருவதில் ஒபாமாவும் அவரது கட்சியினரும் தீவிரமாக உள்ளனர்.
குடியரசுக் கட்சியினரும் லத்தீன் இன மக்களை கவர வேண்டிய அவசியத்தில் இருப்பதால் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். அதே சமயத்தில் அவர்களது கோரிக்கையான சட்டபூர்வமான் குடியேற்ற உரிமைகளும், லாட்டரி நீக்கமும் தீர்மானத்தில் இடம் பெற்றுள்ளன.
இரு கட்சியினருக்கும் பலனளிக்கும் வகையிலும், நீண்ட கால கொள்கையின் அடிப்படையிலும் தீர்மானம் இருப்பதால, காங்கிரஸ் அவையில் சில திருத்தங்களோடு தீர்மானம் நிறைவேறும் வாய்ப்புகள் உள்ளதாகவே வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.