'கொங்கு' தனி மாநிலத்தை உருவாக்குவோம்: இது 'பெஸ்ட்' ராமசாமி பேச்சு!
ஈரோடு: தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களை இணைத்து கொங்கு தனி மாநிலத்தை உருவாக்குவோம் என்று கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பெஸ்ட்ராமசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலையின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கொங்கு நாட்டின் வளர்ச்சியை மையமாக வைத்துதான் கொமுக கட்சி உருவாக்கப்பட்டது. இடையில் தேவையற்ற சில சலசலப்புகள் வந்தபோதும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கொங்கு நாட்டின் வளர்ச்சியை நோக்கி தொடர்ந்து முன்னேறி வருகிறோம்.
தமிழகத்தில் தொழில்வளம் மிக்க பகுதியாக விளங்கும் கொங்கு நாட்டுக்கு அரசியல்வாதிகள் எதுவும் செய்வதில்லை. பிற இடங்களில் எத்தனையோ பாலங்கள், திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் கொங்கு நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை கொங்குநாட்டை சேர்ந்த யாரும் முதல்வராக வர முடியவில்லை. எனவே, ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை இணைத்து கொங்கு மாநிலம் உருவாக்க வேண்டும்.
அப்போதுதான் கொங்கு மண்டலம் வளர்ச்சி பெறும். கொங்கு மாநிலம் உருவாக்குவதுதான் கொமுகவின் நோக்கம் என்றார்.