நமது எம்எல்ஏக்கள் நாயர் மெஸ்சில் குவிவது ஏன்?: சட்டசபையில் ருசிகர விவாதம்!
சென்னை: ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய வேண்டும் என்று சட்டசபையில் பல கட்சி எம்எல்ஏக்களும் கோரிக்கை விடுத்தனர்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய ஆண்டிபட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. தங்கத் தமிழ்ச்செல்வன், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்வதற்கு அரசு ஆவண செய்யுமா என்று கேட்டார்.
இதற்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பதிலளிக்கையில், அதற்கு வாய்ப்பு இல்லை என்று பதிலளித்தார்.
ஆனாலும் விடாமல் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், மதிப்பீட்டு குழுவில் உள்ள நான் சட்டமன்ற ஆய்வுக்குழுவுடன் சென்ற போது சுமார் 12 மாவட்டங்களில் உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் தாங்கள் பாதிப்புக்கு ஆளாவதாக கண்ணீர் விட்டார்கள்.
தேங்காய்க்கு விலை கிடைக்கவில்லை. ஆட்களும் கிடைப்பதில்லை. தேங்காய் மூன்று ரூபாய்க்குத் தான் விற்கிறது. இதனால் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி தென்னை மரங்களை வெட்டுகின்ற நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றனர். இதனால் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வினியோகித்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
10 லட்சம் தென்னை விவசாயிகள் இந்த தொழிலை நம்பி இருப்பதால் அவர்களை ஊக்கப்படுத்த ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்கினால் விவசாயிகளின் வாழ்வும் வளம் பெறும். மேலும், அதிகம் படித்த கேரள மக்கள் சமையலுக்கு தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துவதால் அவர்களுக்கு மாரடைப்பு வருவதில்லை. கொழுப்பு சத்தும் மிகுதியாக இருப்பதில்லை. எனவே இந்த திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்து தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வகை செய்ய வேண்டும்.
அமைச்சர் காமராஜ்: உறுப்பினர் விவசாயிகளின் கவலையை தெரிவித்தார். தேங்காய்க்கு சரியாக விலை கிடைக்கவில்லை என தென்னை விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர் என்பதை ஆதங்கத்தோடு கூறினார். கோடை காலங்களில் சென்னை உள்பட நிறைய ஊர்களில் இளநீர் 20 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் 1 கோடியே 72 லட்சம் லிட்டர் பாமாயில் பாக்கெட் கொடுக்கப்படுகிறது. இதற்கு ரூ.568 கோடியை மானியமாக முதல்வர் தருகிறார். உறுப்பினர் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும் என்கிறார். தமிழ்நாட்டில் தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவத்தான் நிறைய பேர் பயன்படுத்துகின்றனர். சமையலுக்கு ஒரு சிலர்தான் பயன்படுத்துகிறார்கள். 1984ல் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு 1050 மெட்ரிக் டன் தேங்காய் எண்ணெயை வழங்கியது. அதை சென்னை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அனுப்பியபோது அங்கு அதை நிறைய பேர் வாங்கி பயன்படுத்தவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட அதிகம் பயன்படுத்தவில்லை. கேரளாவில் தான் தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
ஜான் ஜேக்கப் (காங்கிரஸ்): நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெயை வழங்கினால் கண்டிப்பாக இனி வரவேற்பு இருக்கும். தேங்காய் எண்ணெயில் கொழுப்பு அதிகம் என்று சிலர் நினைத்து அதை சமையலுக்கு பயன்படுத்தாமல் உள்ளனர். ஆனால் கேரள மாநிலத்தில் நிறைய பேருக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதால் மாரடைப்பு வருவதில்லை. கொழுப்பும் அதிகம் சேருவதில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே தேங்காய் எண்ணெய் ஆரோக்கியமானது.