நாயர் மெஸ்சும் எம்எல்ஏக்களும்...
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்: காலம்காலமாக நம் மக்கள தலைக்கே தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த எண்ணெய் மயிர்க்கால்கள் வழியாக மூளைக்குச் சென்று மூளையை குளிர்ச்சிப்படுத்துகிறது. இந்த தேங்காய் எண்ணெய்யை கேரள மக்கள் சமையலுக்கு மட்டுமல்லாமல் ஆயுர் வேத சிகிச்சைக்கும் பயன்படுத்துகிறார்கள். இந்த தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பு சத்து அதிகம் இருப்பதாக சில வர்த்தகர்கள் தவறான பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். அதைத் தடுப்பதற்கு மத்திய அரசும் விளம்பரம் செய்து வருகிறது. எனவே உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியது போல, ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய வேண்டும்.
தங்க தமிழ்ச்செல்வன்: ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணையை வழங்க முடியாவிட்டால் கூட பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கொடுக்கலாம்.
நடராஜன் (அதிமுக): கடந்த 25 ஆண்டுகளாக தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராக நான் இருந்து வருகிறேன். இது உடலுக்கு ஆரோக்கியமானது. தேங்காய் எண்ணையை அரசு வழங்கினால் அதை மக்கள் வாங்க தயாராகத் தான் உள்ளனர்.
அமைச்சர் காமராஜ்: எனக்கும் தென்னந்தோப்பு இருக்கிறது. இதில் என்ன வாய்ப்பு இருக்கிறதோ அதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம். மக்கள் மீது நாம் எதையும் திணிக்க முடியாது. இப்போது வழங்கப்படும் பாமாயில் 2 ஆண்டுவரை கெடாமல் உள்ளது. தமிழ்நாட்டின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றாற்போல் உள்ளது. இருந்தாலும் உறுப்பினர்கள் தேங்காய் எண்ணையை வழங்க வலியுறுத்துவதால் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, விஞ்ஞானப்பூர்வமாக ஆய்வு நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.