2 ஜி: மன்மோகன் மீது தவறில்லை... ராசா மீதே தப்பு.. வாஜ்பாய் அரசால் ரூ 40,080 கோடி நஷ்டம்- ஜேபிசி
காங்கிரஸ் எம்.பி. பிசி சாக்கோ தலைமையிலான இந்தக் குழு, முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ ராசாதான் பிரதமரை 2 ஜி விவகாரத்தில் தவறாக வழி நடத்தினார் என்று குற்றம் சாட்டியுள்ளது.
அதே நேரம் ரூ 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்ற சிஏஜி அறிக்கையை முட்டாள்தனமான ஒன்று என வர்ணித்துள்ளது.
"2 ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீட்டுக்கான கட்டணம் குறித்த சிஏஜியின் கணக்கீட்டில் மிகப் பெரிய குறை உள்ளது. கணிக்கத் தெரியாமல் தோராயமாக ஒரு தொகையைக் குறிப்பிட்டு வெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது," என ஜேபிசி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு வகுக்கப்பட்ட வரைமுறைகள் கொண்ட பத்திரிகைக் குறிப்பில் ஒரு பத்தியை அழித்தவர் என்று ஆ ராசாவை இந்தக் குழு குற்றம்சாட்டியுள்ளது.
வாஜ்பாய் அரசால் ரூ 40080 கோடி நஷ்டம்
வாஜ்பாய் அரசில் தொலைத் தொடர்புத் துறைக்குப் பொறுப்பு வகித்த ஜக்மோகனின் ஆட்சேபணைகளையும் மீறி வருவாய் பகிர்வு முறைக்கு டெலிகாம் நிறுவனங்களை அனுமதித்தது ரூ 40080 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜேபிசி குற்றம்சாட்டியுள்ளது. மேலும் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நஷ்டம் உண்டாகக் காரணமே முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைசத்சர் பிரமோத் மகாஜன்தான் என்கிறது ஜேபிசி.
மக்கள் பெற்ற பலன்களை மறந்தது ஏன்?
'2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்பது மிகப் பெரிய அபத்தக் கணக்கு. தொலைத் தொடர்புக் கொள்கையின் நோக்கம் வருவாயை அதிகரிப்பதல்ல. அடித்தட்டு மக்கள் வரை கிடைத்த பலனைத்தான் கணக்கில் கொள்ள வேண்டும்', என்றும் ஜேபிசி தெரிவித்துள்ளது.
ஜேபிசியின் இந்த புதிய அறிக்கை நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் திங்கள் கிழமை சமர்ப்பிக்கப்படும். அப்போது திமுக மற்றும் பாஜகவினர் பெரும் எதிர்ப்பில் ஈடுபடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.