பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்?.. இது நம்பும்படியாகவா உள்ளது?: கருணாநிதி
2ஜி ஊழல் குறித்து விசாரித்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, உறுப்பினர்களுக்கு வழங்கிய வரைவு அறிக்கையில் இந்த விவகாரத்தில் பிரதமருக்கும் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பில்லை என்றும், முழுப் பொறுப்பும் ஆ.ராசாவையே சாரும் என்றும் கூறியிருந்தது. மேலும், ஆ.ராசா, பிரதமரை தவறாக வழிநடத்தியதாகவும் கூறியிருந்தது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் குற்றமற்றவர்கள். முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ ராசாதான் பிரதமரை 2ஜி விவகாரத்தில் தவறாக வழி நடத்தினார் என்று நாடாளுமன்றக் கூட்டுக் குழுவான ஜே.பி.சி. குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. பிசி சாக்கோ தலைமையிலான இந்தக் குழு வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையில், பழி முழுவதையும் ராசா மீது போட்டுள்ளது. மேலும் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ரூ 40,080 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்ற சிஏஜி அறிக்கை முட்டாள்தனமான ஒன்று என்றும் இந்தக் குழு கூறியுள்ளது.
இந் நிலையில் இன்று நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:
கேள்வி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து விசாரணை நடத்த மத்திய அரசால் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக் குழு கொடுத்துள்ள வரைவு அறிக்கையில், பிரதமரை மத்திய அமைச்சராக இருந்த ஆ. ராசா தவறாக வழி நடத்தினார் என்று சொல்லப்பட்டிருக்கிறதே. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
கருணாநிதி: ஒரு பிரதமரை ஒரு அமைச்சர் எப்படி தவறாக வழி நடத்த முடியும்?. இப்படிச் சொல்லும் ஒரு அறிக்கையை எப்படி நம்ப முடியும்?
கேள்வி: ஆ.ராசா சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார். வந்த பிறகு இதைப்பற்றி அவருக்கு ஆலோசனை கூறுவீர்களா?
கருணாநிதி: அவர் அந்தத் துறையின் அமைச்சராக இருந்தவர். அவருக்குத் தெரியாத ஆலோசனைகளை நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. சரியான வழியில் நீதி வழங்கப்பட வேண்டும், முறையான நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை "சிலப்பதிகாரக்" காலத்திலிருந்து தமிழ் நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள்.
கேள்வி: கூட்டுறவு தேர்தல்களை நீங்கள் முன்பே புறக்கணித்து விட்டீர்கள். ஆனால் அந்தத் தேர்தல்களில் போட்டியிட்டு இப்போது மார்க்சிஸ்ட் கட்சி போன்றவை அந்தத் தேர்தல்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்களே?
கருணாநிதி: நாங்கள் முன்பே கூட்டுறவுத் தேர்தல்கள் எப்படி நடக்கும் என்பதை உணர்ந்து, கூட்டுறவுத் தேர்தல்களை புறக்கணித்து விட்டோம். மற்றக் கட்சிக்காரர்கள் இப்போது உண்மையை அனுபவப்பூர்வமாக உணர்ந்து, போராட்டங்களை நடத்துகிறார்கள்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
முன்னதாக இது குறித்து காங்கிரஸ் எம்பியான டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், தன்னையும் ஜேபிசி அழைத்து விசாரிக்க வேண்டும் என்று ராசா வைத்த வேண்டுகோளை புறக்கணித்துவிட்டனர். அப்படியிருக்கும்போது ராசா மீதே எப்படி குற்றம் சாட்ட முடியும்?. இது ஒரு வரைவு அறிக்கை தான். இதில் ஜேபிசியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கையெழுத்துப் போட வேண்டும். அப்போது தான் இது அறிக்கையாகும். அறிக்கை மற்ற உறுப்பினர்களிடம் வரட்டும், அப்போது பார்க்கலாம் என்றார்.