நில அபகரிப்பு: கூடுதல் டிஜிபி ஜாங்கிட் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!
வழக்கு என்ன?
காஞ்சிபுரம் மாவட்டம், வடநெமிலி கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் அப்பகுதி கிராம மக்களின் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வடநெமிலி மக்களின் பொது உபயோகத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்த 9.60 ஏக்கர் நிலத்தை ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் யாதவ் மற்றும் சென்னை புறநகர் முன்னாள் ஆணையர் ஜாங்கிட் ஆகியோர் ரவிச்சந்திரன் மற்றும் சந்திரசேகரன் ஆகிய அவர்களது பினாமிகள் மூலம் அபகரித்துள்ளனர். இதனால் கிராம மக்கள் பொது பாதையை பயன்படுத்த முடியாமலும் பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாமலும் அவர்களது அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட நில அபகரிப்பு புகாரில் 2011 ஜூலை மாதம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நீதிமன்றம் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் கோரியிருந்தார். மேலும் உயர் அதிகாரிகள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதால் காவல் துறை முறையாக விசாரணை நடத்த தயங்குகிறது என்றும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
வேறு நீதிபதிக்கு மாற்றம்
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கும் நிலையில் இவ்வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுமாறு பரிந்துரை செய்தார் அவர். தலைமை நீதிபதியின் உத்தரவின்பேரில் இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. இவ்வழக்கு விசாரணையில் இருந்தபோது, குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் இவ்வழக்கில் தங்களையும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனு செய்தனர். பின்னர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் யாதவ் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனு செய்திருந்தார். மூவர் மனுவையும் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
விசாரணைக்கு உத்தரவு
இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் சோமையாஜி, இந்த விவகாரத்தில் அரசு விசாரணை நடத்தி ஆவணங்களை சரிபார்த்துவிட்டது. இருப்பினும் உயர் அதிகாரிகள் மீது புகார் கூறப்படுவதால் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது என்றார். விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட கடித எண் என்ன என்று மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. தன்னுடைய வாதத்தை உறுதிமொழியாக நீதிமன்றம் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார் சோமையாஜி. அரசு தலைமை வழக்கறிஞர் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி கிருபாகரன் வழக்கை முடித்து வைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.