சவுதியில் விரட்டப்பட்ட 300 ஈழத் தமிழர்கள்... சாலை ஓரமாக வாழும் அவலம்
சவுதியில் பணியில் இருந்து விரட்டப்பட்ட ஈழத்தமிழர்கள் 300 பேர் சொந்த நாட்டிற்கு திரும்ப வழியின்றி சாலை ஓரத்தில் வசித்து வருகின்றனர். தங்களை மீட்டு சொந்த ஊருக்கு திரும்ப இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும்
1000 தமிழர்கள்...
இலங்கை மட்டக்களப்பு பகுதியில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ஆயிரம் தமிழர்கள் சவுதி அரேபியா ஜெத்தா நகருக்கு கட்டுமான பணி வேலைக்கு சென்றனர். இவர்கள் குறைந்த ஊதியத்திற்குத்தான் அங்கு பணியில் அமர்த்தப்பட்டனர்.
இகாமா வழங்கப்படவில்லை....
இவர்களுக்கு சவுதி அரேபிய அரசின் அடையாள அட்டையான இகாமா இதுவரை வழங்கப்படவில்லை. அண்மையில் சவுதி அரசு அக்காமா இல்லாத வெளிநாட்டவர்களை எந்த நிறுவனமும் பணியில் அமர்த்தக் கூடாது என கடுமையான சட்டம் கொண்டு வந்தது . அந்த சட்டத்தை தொடர்ந்து பல வெளிநாட்டவர்கள் பல நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப் பட்டனர். இந்தியர் ஆயிரக்கணக்கில் வெளியேறினர். அவர்களை பாதுகாக்க இந்திய தூதரகம் முயற்சிகள் எடுத்ததில் பல இந்தியத் தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இலங்கை அரசு முன்வரவில்லை
ஆனால் இலங்கையின் குடிமக்களாகிய தமிழர்கள் மூன்று மாதத்திற்கு முன்பு நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப் பட்டபோது, அவர்களை பத்திரமாக மீட்டெடுக்க இலங்கை அரசு முன்வரவில்லை. அதனால் இப்போது இலங்கை தமிழர்கள் சுமார் 300 பேர்கள் உறைவிடம், உணவு, தண்ணீர், கழிப்பிடம் போன்ற எந்த வசதியும் இல்லாமல் சாலை ஓரத்தில் கொளுத்தும் வெயிலில் வாடுகின்றனர்.
இவர்களை மீட்டு அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்புமாறு கோரிக்கை வைத்துள்ளனர் தமிழர்கள். இதில் சில சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பது தான் இப்போது கேள்விக்குறியாக உள்ளது.