யுஎஸ் விசா தீர்மானம் செனட் சபையில் தாக்கல்: என்ன செய்யப் போகின்றன இந்திய ஐடி நிறுவனங்கள்?
வாஷிங்டன்(யு.எஸ்): கேங் ஆஃப் எய்ட்(Gang of Eight) என்று அழைக்கப்படும் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் எட்டு செனட்டர்கள் வரையறுத்த விசா, குடியேற்ற சட்ட சீர்திருத்த தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேறினால் இந்திய ஐடி நிறுவனங்கள் கடும் பாதிப்புகளை சந்திக்க வேண்டி வரும். எனவே அவை அடுத்து என்ன செய்யப் போகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்கப் பெரிய ஐடி நிறுவனங்களின் நிர்ப்பந்தம்
ஹெச்1 பி விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கூகுள், ஃபேஸ்புக், ஆரக்கிள், மைக்ரோசாஃப்ட், இண்டெல் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் அரசை வலியுறுத்தி வந்தன. ஆண்டுக்கு 65 ஆயிரம் என்ற ஹெச்1 பி விசா எண்ணிக்கை 110 ஆயிரமாக இந்த தீர்மானத்தில்.உயர்த்தப் பட்டுள்ளது. தேவை அதிகமாக இருக்கும் ஆண்டில் இது 180 ஆயிரம் வரையிலும் உயர்த்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கூடவே ஏராளமான புதிய நடைமுறைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப் பட்டுள்ளன. இந்திய ஐடி நிறுவனங்களை குறிவைத்தே இவை சேர்க்கப்பட்டுள்ளன என்ற எண்ணம் உருவாகியுள்ளது.
இந்திய ஐடி துறை வல்லுனர்களுக்கு டிமாண்ட்
மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்து அமெரிக்க நிறுவன்ங்களிலும், ஏராளமான இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். முக்கிய பொறுப்புகளிலும் இருக்கின்றனர். கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை என்ற தமிழர், சிஇஓ வுக்கு அடுத்த உயர்பதவியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹெச்1 பி விசாவில் அதிக எண்ணிக்கையில் இருப்பதுவும் இந்தியர்கள்தான்.
ஆண்டுக்கு 65 ஆயிரம் விசாக்கள் இருந்தாலும், பெரும்பானமையான எண்ணிக்கை இந்திய ஐடி நிறுவன்ங்களே கைப்பற்றி விடுகின்றன. மேலும், இந்திய அலுவலகத்திலிருந்து மேலாளர் ட்ரான்ஸ்ஃபர் என்றஅடிப்படையில் எல்1 விசாவிலும் வருகின்றனர்.
பெரிய நிறுவனங்களுக்கு தகுதியான ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்து வந்தது. அமெரிக்கா வந்த பிறகு, ஹெச்1பி விசாவில் இருப்பவர் வேறு நிறுவனத்திற்கு வேலை மாறி செல்வதுவும் மிகவும் கடினமானதாக இருந்தது. அதாவது இந்திய ஐடி நிறுவனத்தின் மூலம் ஹெச்1 பி விசாவில் வந்தவர்கள் நீண்டகாலம், அதே நிறுவனத்திலேயே வேலை பார்க்க வேண்டிய அவசியம் தொடர்ந்தது.
கட்டுப்பாடுகள் மூலம் கூட்டைக் கலைத்த ஜாம்பவான்கள்
புதிய விதிமுறைகள் மூலம், ஹெச் 1 பி விசாவில் இருப்பவர், வேறு நிறுவனத்திற்கு வேலை மாற்றம் செய்ய வசதியாக 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் புதிய வேலையில் சேர்ந்து விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. விசாவும் புதிய நிறுவனத்தின் பெயரில் மாற்றலாகிவிடும்.
75 சதவீதத்திற்கும் அதிகமாக ஹெச்1பி விசா ஊழியர்களைக் கொண்ட நிறுவனத்திற்கு, மேற்கொண்டு விசா விண்ணப்பிக்க உடனடித் தடை விதிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு விசாவுக்கும் கூடுதல் கட்டணமும் உண்டு. 15 சதவீத்த்திற்கும் அதிகமாக ஹெச்1பி ஊழியர்கள் கொண்ட நிறுவனம், ஹெச்1பி ஊழியர்களை வேறு நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலையில் அமர்த்துவதும் தடை செய்ய்ப்படுகிறது..25 ஊழியர்களே கொண்ட சிறு நிறுவனங்களும் விதிவிலக்கல்ல.
இதன் மூலம் பாடிஷாப் (body shop) என்று அழைக்கப்படும், இந்தியர்களுக்கு சொந்தமான சிறு சிறு நிறுவனங்களும் பெரும் நெருக்கடிக்குள்ளாகின்றன.
ஒவ்வொரு ஹெச்1 பி விசா விண்ணப்பத்திற்கு முன்னதாக, கூடுதல் சம்பளத்துடன் புதிய வேலைவாய்ப்பு குறித்து அரசு இணையத் தளத்தில் வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. யாரேனும் சரியான தகுதியுடன், அமெரிக்க குடிமக்கள் அல்லது க்ரீன்கார்டுதாரர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கே, அதே கூடுதல் சம்பளத்தில் வேலை கொடுக்க வேண்டும்.
இப்படிப் போன்ற கட்டுப்பாடுகள், அமெரிக்காவின் பெரிய ஐடி நிறுவனங்களின் வலியுறுத்தலால் தான் சேர்க்கப்பட்டுள்ளன என்று கருதப்படுகிறது.
இந்த கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் திறமையான இந்திய ஐடி வல்லுனர்களுக்கு கூடுதல் வாய்ப்பையும், அதிக ஊதியத்தையும் கிடைக்கச் செய்யும் என்றும் எதிர்ப் பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் சபையில் நிறைவேறுமா?
இரு கட்சிகளின் செனட் உறுப்பினர்களின் ஒப்புதலோடு தயாரிக்கப்பட்ட தீர்மானம், செனட் சபையில் நிறைவேறுவதில் எந்த சிக்கலும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் குடியரசுக் கட்சி பெரும்பான்மை கொண்ட காங்கிரஸ் சபையில், தீர்மானம் முழுமையாக நிறைவேறுமா என்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. தீர்மானம் நிறைவேறினால் கூட, சில திருத்தங்கள் கண்டிப்பாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது
பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாகவும், தங்களுக்கு பாதகமாகவும் இருக்கும் தீர்மான அம்சங்களை, காங்கிரஸ் உறுப்பினர்கள் மூலம் சபையில் இந்திய நிறுவனங்கள் வெளிக்கொண்டு வருவார்களா என்ற எதிர்ப்பார்ப்புகளும் எழுந்துள்ளன.