சோலார் மின்வேலி: இந்திய எல்லை அருகே நேபாள அரசு அமைத்தது
காட்மாண்டு: விலங்குகளை விரட்ட உதவுவதற்கு ஏற்ற வகையில் , தீங்கினை விளைவிக்காத சோலார் மின்வேலியை நேபாள அரசு இந்திய எல்லையில் அமைத்துள்ளது.
நாட்டின் விவசாய நிலங்களைக் காட்டுமிருகங்களிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு, இந்திய நாட்டின் எல்லை ஓரம் உள்ள துத்வா புலிகள் சரணாலயம் அருகில், சுமார் 15 கி.மீ நீளத்திற்கு, சூரிய சக்தியில் இயங்கும் மின்வேலியை நேபாள அரசு அமைத்துள்ளது.
விவசாய நிலங்கள் அருகே வரும் காட்டு விலங்குகள், வயலுக்குள் நுழையும்போது, வேலியில் பாயும் மின்சாரம் தாக்குவதால், உள்ளே நுழையாமல் திரும்பி விடுகின்றன. எல்லைப் பாதுகாப்பு வீரர்களும், வன இலாகா அதிகாரிகளும், இது குறித்து இரு நாட்டு மக்களிடமும் தெரிவித்துள்ளனர்.
எல்லைக்கு அருகில் உள்ள தாழ்வான பகுதிகளை அடுத்துள்ள காடுகளில் இருந்து, யானைகள், புலிகள் மற்றும் காண்டாமிருகங்கள் போன்றவை தொடர்ந்து தங்கள் விளைநிலங்களை நாசம் செய்வதாக, நேபாள நாட்டு விவசாயிகள் அரசிடம் தொடர்ந்து புகார் அளித்தனர். எனவே, நேபாள அரசு, உலக வனப்பாதுகாப்பு நிதி மையத்தின் உதவியுடன், லக்கிம்பூர் எல்லையில் இந்த சூரிய சக்தி வேலியை அமைத்துள்ளது.
இந்த ஏற்பாடு குறித்து, எல்லையோரம் வசிக்கும் இரு நாடுகளின் மக்களுடனும், வனப்பாதுகாப்பு அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்தாலோசனை செய்யப்பட்டது. அம்மையத்தின் அதிகாரிகள், இந்த சூரிய சக்தி வேலிகள் மிருகங்களை விரட்ட உதவுமே அன்றி, அவற்றுக்கு தீங்கினை விளைவிக்காது என்றும், ஆயினும் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.