பாஸ்டன் குண்டுவெடிப்பு: 2வது தீவிரவாதி போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் படுகாயம்- கைது
செசன்யா அருகே உள்ள ரஷ்ய பகுதியைச் சேர்ந்த தமேர்லான் சர்னயேவ் (26), ஷோக்கர் (19 இருவரும் கல்வி பயில சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு வந்தவர்கள்.
இந்த இருவரும் தான் கடந்த திங்கள்கிழமை நடந்த மாராதான் போட்டியில் வெடிகுண்டு வைத்தவர்கள். சிசிடிவில் பதிவான இந்த இருவரின் படங்களையும் எப்பிஐ வெளியிட்டு இருவரையும் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இருவரும் வாட்டர்டவுன் பகுதியில் காரில் வந்த ஒருவரை துப்பாக்கி முனையில் வழிமறித்து அவரை காருடன் கடத்தினர்.
பின்னர் காரில் இருந்தவரை இறக்கிவிட்டுச் சென்றனர். இந்த விவரம் அறிந்த போலீசார் அந்தக் காரை விரட்டிச் சென்றபோது, இருவரும் காரில் இருந்து வெடிகுண்டுகளை வெளியே வீசினர். இதையடுத்து எப்பிஐயும் போலீசாரும் அந்தக் காரை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் காரில் இருந்த தமேர்லான் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆனால், ஷோக்கர் தப்பிவிட்டார். இதையடுத்து இவரைத் தேடி வாட்டர்டவுன் பகுதியில் வீடுவீடாக சோதனை நடந்தது. நேற்றிரவு வாட்டர்டவுனின் பிராங்ளின் தெருவில் உள்ள ஒரு வீட்டின் பின் பகுதியில் ஆற்றுப் பகுதியில் ஒரு படகில் இவர் பதுங்கியிருந்தார்.
அவரை போலீசார் சுற்றி வளைத்தபோது அவர் துப்பாகியால் சுட்டார். இதையடுத்து போலீசார் திருப்பிச் சுட்டதில் காயமடைந்த அவர் பிடிபட்டார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள அவரிடம் விசாரணை நடத்தினால் தான் இந்தத் தாக்குதலுக்கான காரணங்கள் குறித்த விவரங்கள் வெளியே வரும்.