தினத்தந்தி அதிபர் பா சிவந்தி ஆதித்தன் மரணம்!
சென்னை: தினத்தந்தி அதிபர் பா சிவந்தி ஆதித்தன் வெள்ளிக்கிழமை மாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73.
தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி பா ஆதித்தனாரின் மகன் சிவந்தி ஆதித்தன்.
ஆதித்தனாரின் மறைவுக்குப் பிறகு தினத்தந்தி நாளிதழின் அதிபராகப் பொறுப்பேற்று நிர்வாகத்தை நடத்தி வந்தார். இதழியல் துறையில் சிறப்பான இடம் வகித்தவர்.
கல்விப் பணியில் மிகச் சிறந்த இடம் வகித்தவர் சிவந்தி ஆதித்தன். தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரைச் சுற்றிலும் கல்லூரிகளை நிறுவி அந்தப் பகுதி மக்களின் உயர் கல்விக்கு வழிவகுத்தவர்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சிவந்தி ஆதித்தன். இன்று மாலை அவர் உயிர் பிரிந்தது.
தினத்தந்தி, மாலை மலர், ராணி, கோகுலம் கதிர் என பல பத்திரிகைகளை நடத்திய அவர், சமீபத்தில்தான் தந்தி டிவியைத் தொடங்கினார்.
சிவந்தி ஆதித்தனுக்கு மனைவியும் பாலசுப்ரமணிய ஆதித்தன் என்ற மகனும் உள்ளார்.
சிவந்தி ஆதித்தன் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை மாலை 3 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெறும்.