உலகிலேயே முதல் முறையாக .. உடலுக்கு வெளியே இயங்கிய கல்லீரல்
லண்டன்: உலகிலேயே முதல் முறையாக உடலுக்கு வெளியே மனித கல்லீரலை இயங்க வைத்து சாதனை படைத்துள்ளனர் விஞ்ஞானிகள்.
ஒரு அதி நவீன சாதனத்தில் 2 மனித கல்லீரலை வைத்து அதை இயங்கச் செய்து பின்னர் தேவைப்பட்ட நோயாளிகளுக்கு அந்தக் கல்லீரல்களைப் பொருத்தி இந்த சாதனையை செய்துள்ளனர் விஞ்ஞானிகள்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில்தான் இந்த நவீன சாதனம் உருவாக்கப்பட்டு வரலாறு படைத்துள்ளது. கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் இந்த வியப்புக்குரிய அறுவைச் சிகிச்சை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இது தாங்க கல்லீரல்...
தானமாக பெறப்பட்ட கல்லீரைலத்தான் இப்படி வெளியில் வைத்து இயக்கத்திலேயே நீட்டிக்க வைத்து பின்னர் இன்னொரு நோயாளிக்குப் பொருத்தியுள்ளனர் லண்டன் நிபுணர்கள்.
வெயிட்டிங் பார் கல்லீரல்...
இதுவரை 2 நோயாளிகளுக்கு இப்படி வெளியில் வைத்து இயங்கச் செய்து பின்னர் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தியுள்ளனராம். இன்னும் சிலர் வெயிட்டிங் லிஸ்ட்டில் காத்துள்ளனராம்.
நலம் வாழ எந்நாளும்...
அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட இரண்டுநோயாளிகளும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாடிலாம் ஐஸ்பொட்டி தான்...
இதற்கு முன்பு வரை என்ன செய்வார்கள் என்றால், தானமாக பெறப்பட்ட கல்லீரலை ஐஸ் பெட்டியில் பத்திரப்படுத்தி வைப்பார்கள். அதன் மெட்டபாலிஸம் இதனால் குறையும். பிறகு தேவைப்படுவோருக்கு எடுத்துப் பொருத்துவார்கள்.
புது டெக்னிக்...
இந்த முறை மூலம் பல நேரங்களில் கல்லீரல் பாதிக்கப்படும் நிலைமை உருவாகிறது. இந்த நிலையி்தான் பெரும் வரப் பிரசாதமாக, கல்லீரலை உடலுக்கு வெளியே இயங்கச் செய்து அதை பொருத்தும் புதிய தொழில்நுட்பத்தை லண்டன் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
சோதனை முயற்சி...
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில்தான் இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் இதை சோதனை ரீதியாக செயல்படுத்தி வருகின்றனர். இருப்பினும் உடலுக்கு வெளியே இயங்க வைக்கப்படும் கல்லீரலை 24 மணி நேரம் மட்டுமே அவ்வாறு இயங்கச் செய்ய முடியுமாம். அதற்குள் வேறு ஒருவருக்கு பொருத்தி விட வேண்டுமாம்.
புதிய தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது....
புதிய தொழில்நுட்பத்தின்படி, தானமாக பெறப்பட்ட கல்லீரலை விசேடமாக தயாரிக்கப்பட்ட சாதனத்தில் வைக்கிறார்கள். பின்னர் அதன் வெப்பநிலை, மனிதனின் உடலின் தட்பவெப்ப நிலையில் வைத்துப் பராமரிக்கப்படுகிறது. பிறகு, ஆக்சிசன் ஏற்றப்பட்ட ரத்த சிவப்பனுக்கள் கல்லீரலின் சிறிய குழாய்கள் மூலம் செலுத்தப்படுகிறது. இந்த மெஷினில் கல்லீரலானது, இயல்பாக இயங்கத் தொடங்கியதும், அதன் நிறம் உள்ளிட்டவை இயல்பு நிலைக்குத் திரும்பி விடும்.
வரப்பிரசாதம்...
கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு இந்த புதிய தொழில்நுட்பம் வரப்பிரசாதம் என டாக்டர்கள் கூறுகிறார்கள்.
மாற்று கல்லீரல்...
ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஆண்டுக்கு 13,000 கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகள் நடக்கின்றனவாம். 30,000 பேர் வரை மாற்று கல்லீரல் வேண்டி காத்துள்ளனராம். இவர்கஏளில் 25 சதவீதம் பேர் சரியான நேரத்தில் கல்லீரல் கிடைக்காமல் மரணமடைய நேரிடுகிறதாம்.
வேஸ்டாகும் கல்லீரல்கள்...
இதை விட கொடுமையாக ஆண்டுக்கு 2000 கல்லீரல்கள் பயன்படுத்த முடியாமல் தூக்கி வீசப்படும் நிலைக்கு ஆளாகின்றனவாம். முறையாக பராமரிக்க, பாதுகாக்க முடியாததால் இந்த அவல நிலை.
லண்டன்ல தான் பெரிசு...
ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மையமாக லண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆண்டுக்கு 200 அறுவைச் சிகிச்சை வரை நடைபெறுகின்றனவாம்.