காட்பாடியில் இளம்பெண்ணை ஏமாற்றி மணந்த திருநங்கை: முதல் இரவில் குட்டு உடைந்தது
வேலூர்: காட்பாடியில் திருநங்கைக்கு இளம்பெண்ணை திருமணம் செய்து வைத்தது முதல் இரவில் அம்பலமானது. இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி.யிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா அசோக் நகரைச் சேர்ந்த ஒருவர் நேற்று எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தார். அவர் ஒரு புகார் மனுவை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
காட்பாடி அசோக் நகர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த நான் என் மகளுடன் வசித்து வருகிறேன். என் மகளுக்கு 22 வயது ஆகியும் திருமணம் நடக்கவில்லை. பல இடங்களில் மாப்பிள்ளை தேடி வந்தேன்.
இந்நிலையில் வேலூர் அடுத்த சதுப்பேரி கிராமத்தை சேர்ந்த சிவாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என் மகளை பெண் கேட்டு அவரது குடும்பத்தினர் மார்ச் மாதம் என் வீட்டுக்கு வந்தனர். மாப்பிள்ளை சுயதொழில் செய்து கைநிறைய சம்பாதிப்பதாகவும், பெண் கொடுத்தால் நல்லமுறையில் வாழ்வாள் என் ஆசை வார்த்தை கூறினர்.
சதுப்பேரி கிராமத்தை சேர்ந்த பிரமுகர் ஒருவர் என் வீட்டுக்கு வந்து சிவா நல்ல பையன் அவனுக்கு பெண்ணை திருமணம் செய்து வைக்கலாம் என்றார். அவர் பேச்சில் நம்பிக்கை வைத்து கடந்த மாதம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. பெண்ணுக்கு 3 பவுன் நகை மாப்பிள்ளைக்கு அரை பவுன் மோதிரம், ரூ.50,000 மதிப்பில் டூவிலர் என பேசி முடிக்கப்பட்டது.
சீர்வரிசையுடன் கடந்த ஏப்ரல் 14ம் தேதி என் மகளுக்கும் சிவாவுக்கும் திருமணம் நடந்தது. ஆயிரமாயிரம் கனவுகளுடன் புகுந்த வீட்டுக்கு சென்றாள் என் மகள். அன்று இரவு நடந்த முதரலிரவில் சிவா திருநங்கை என்பது என் மகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து 4 நாட்கள் நரக வாழ்க்கை அனுபவித்த என் மகள் அவருடன் வாழ முடியாது என கூறி மீண்டும் என் வீட்டுக்கே வந்துவிட்டார்.
இதை தொடர்ந்து சிவா மற்றும் அவரது அண்ணன்களிடம் நியாயம் கேட்க அவர்கள் வீட்டுக்கு சென்றபோது சரியான பதில் கிடைக்கவில்லை. திருநங்கைக்கு இளம்பெண்ணை திருமணம் செய்து வைக்க தூண்டிய சிவா குடும்பத்தினர் மீதும், திருமணத்துக்கு உறுதுணையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து திருமண செலவு தொகை ரூ.3 லட்சமும், சீர்வரிசைப் பொருட்களையும் மீட்டு தர நடவடிக்ககை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.