டெல்லி சிறுமி கற்பழிப்பு கோரமானது: சட்டத்தை இன்னும் கடுமையாக்க வேண்டும்- மன்மோகன் சிங்
தலைநகர் டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16-ந் தேதி ஓடும் பஸ்சில் ஒரு மாணவி 6 கயவர்களாலும், கடந்த வாரம் 5 வயது பிஞ்சுக்குழந்தை ஒரு காமுகனாலும் கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நாடு முழுவதும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளன.
டெல்லியில் நேற்று நடந்த 8-வது குடிமைப்பணிகள் தின நாள் விழாவில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் இது குறித்து பேசி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ‘நமது நாட்டில் இந்த விஷயத்தில் (பெண்களை பத்திரமாக பாதுகாப்பது) நாம் இன்னும் விரிவான முன்னேற்றங்களை அடைய வேண்டும் என்பது பரவலாக எல்லா தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் நடந்த கொடூரமான கும்பல் கற்பழிப்பு சம்பவத்துக்கு பின்னர் இந்த விஷயங்களில் நமது தீவிரமான கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பாக ஒரு சின்னஞ்சிறு குழந்தை மிகவும் கோரமான முறையில் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறாள். இந்த சம்பவம், இத்தகைய கொடிய ஒழுக்கக்கேட்டை நாம் ஒன்றுபட்டு நின்று பாடுபட்டு, இந்த சமூகத்தில் இருந்து வேரோடு மண்ணாக வீழ்த்த வேண்டும் என்று நமக்கு நினைவுபடுத்துகிறது.
இந்த இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து நடந்து வருகிற போராட்டங்கள், பொதுமக்களின் கவலையுடன் கூடிய சம்பவங்களை கையாள்கிறபோது நாம் நமது கவனத்தையும், மதி நுட்பத்திறனையும் காட்ட வேண்டும் என்று உணர்த்துகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை இன்னும் அதிக வலுவுடன் கையாள்வதற்கு ஏற்ற வகையில் சட்டத்தினை கடுமையாக்குவதற்கு நமது அரசு துரிதமாக செயல்பட்டிருக்கிறது. ஆனால் நாம் செய்ய வேண்டியதில் இது மிகச்சிறிய பங்குதான்.
இந்த நாட்டில் உள்ள பெண்களுக்கு சமூக, பொருளாதார அதிகாரம் வழங்குவதில் பொறுப்புள்ள குடிமக்கள் என்ற வகையில், சிறப்பான பங்களிப்பு செய்ய வேண்டிய கடமை நமக்கு உண்டு', இவ்வாறு பெண்கள் பாதுகாப்பு பற்றி பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.
தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங், நாட்டின் பொருளாதார நிலைமை பற்றி பேசினார். அப்போது அவர், ‘‘நாம் தற்போதைய கடினமான நிலையில் இருந்து மீண்டு எழுவதற்கு துறைகளைக் கடந்து முதலீடுகளை கவர வேண்டும். தொழில் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்வது தொடர்பாக மத்திய மந்திரிகள் குழுவை அமைப்பதற்கு அரசு முக்கிய நடவடிக்கை எடுத்தது. அந்த குழு ஊக்கம் அளிக்கக்கூடிய வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் இன்னும் செய்ய வேண்டும். குறிப்பாக, எளியவிதத்தில் தொழில்கள் தொடங்கவும், முதலீடுகள் பெறவும் ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும்'' என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங் குடிமைப்பணி அதிகாரிகள் பற்றி பேசும்போது, ‘‘குடிமைப்பணி அதிகாரிகள் பணிக்கு வரும்போதே மிக உயர் தரமான பயிற்சி அளிக்கப்பட வேண்டியது அவசியம். இது நிர்வாகம் மற்றும் பொருளாதாரத்தில் உள்ள சிக்கல்களைக் களைவதற்கு அவர்களை ஆற்றல் வாய்ந்தவர்களாக ஆக்கும்'' என கூறினார்.