கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்: சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்
டெல்லி: கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிப்பது குறித்து விவாதிக்க எங்கள் கட்சி தயாராக உள்ளது. இது மிகவும் முக்கியமான விஷயம் ஆகும். டெல்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவம் கொடூரமானது. சமுதாயத்தில் ஏதோ தவறு உள்ளது. மக்களுக்கு சட்டத்தின் மீது மதிப்போ, பயமோ இல்லை.
முதலில் சட்டம் மீது பயத்தை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் தான் சட்டத்தை மக்கள் மதிப்பார்கள். போலீசார் இப்படி நடக்கக் கூடாது. அதாவது லஞ்சம் கொடுத்து மக்களின் வாயை அடைப்பதை பற்றி கூறுகிறேன். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர்தாக்கப்பட்டது ஏற்றுக்கொள்ளக் கூடிய விஷயமில்லை. இதனால் தான் சட்டத்தின் மீது மதிப்பில்லாமல் போயுள்ளது என்றார்.
கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.