சேலம்: நாய்கள் துரத்தி 6 மான்கள் கிணற்றில் விழுந்து பலி
சேலம்: நாய்கள் துரத்தியதால் 6 மான்கள் கிணற்றில் விழுந்து பலியாயின. வனத்துறையினரின் முயற்சியால் ஒரு மான் மட்டும் காப்பாற்றப்பட்டது.
கோடையின் உக்கிரத்தால், சேலம், தர்மபுரி மாவட்ட வனப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. இதனால், வனத்தில் உள்ள விலங்குகள் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமத்திற்குள் புகுந்து விடுகின்றன.
தண்ணீர் தேடி வரும் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள், தோட்டத்து கிணறுகளில் தவறி விழுந்து இறப்பதும், காட்டிலிருந்து வழிதவறி வரும் இந்த விலங்குகள் மனிதர்கள் மற்றும் தெருநாய்களால் அதிகளவில் வேட்டையாடப்படுவதும் தொடர்ந்து வருகிறது.
அரூரில் இருந்து, தர்மபுரி செல்லும் சாலையில், மொரப்பூர் வனச் சரகத்திற்கு உட்பட்ட காப்புக் காடுகள் உள்ளன. இதில், 2,000க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் உள்ளன. இந்த காப்பு காட்டு பகுதியில் இருந்து நேற்று அதிகாலை மான்கள், தண்ணீர் தேடி, எட்டிப்பட்டி, அக்ராகரம் கிராமங்களுக்குள் புகுந்தன.
அப்போது, அங்கிருந்த நாய்கள் துரத்தியதில், எட்டிபட்டியை சேர்ந்த விவசாயி நயினார் என்பவரது தோட்டத்தில் இருந்த தண்ணீர் இல்லாத கிணற்றில், மூன்று பெண் மான்கள் தவறி விழுந்தன, இதில் படுகாயம் அடைந்த, இரு மான்கள் இறந்து விட்டது.உயிருக்கு போராடிக்கொண்டிருந்த, ஒரு பெண் மானை அரூர் தீயணைப்புத் துறையினர் மீட்டு, மொரப்பூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதே போல, அக்ராகரத்தை சேர்ந்த விவசாயி தமிழ்மணி என்பவரின் தண்ணீர் இல்லாத கிணற்றில், ஐந்து பெண் மான்கள் தவறி விழுந்ததில், நான்கு மான்கள் உயிரிழந்தன, உயிருக்கு போராடிய, ஒரு மானை, வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து காப்பு காட்டில் விட்டனர்.
மேலும் அரூர் - தர்மபுரி சாலையில், அரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே உள்ள காடுகளில் இருந்து, தண்ணீர் தேடி வரும் மான்கள், அவ்வழியாக வரும் வாகனங்களில் அடிப்பட்டு இறந்து வரும், அவலநிலை உள்ளது. வரும் நாட்களில், பெய்யவேண்டிய பருவமழை பெய்தால் மட்டும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக்கும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.