சென்னை: ஐபிஎல் 6வது தொடரின் நேற்று சென்னையில் நடைபெற்ற அற்புதமான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களை கடைசி ஓவரில் ஆனந்த கூத்தாட வைத்தார் பிராவோ.
முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வாட்சன் சதம் 101 ரன்கள் அடித்தார். இந்த சீசனில் முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை தட்டிச் சென்றார் அவர். பின்னர் 186 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் 3 ரன்களிலேயே அவுட் ஆகிப் போனார். மைக் ஹஸ்சி -ரெய்னா ஜோடி சிறப்பாக விளையாடியது. 17வது ஓவரில் பெரும் பரபரப்பும் பதற்றமும் சென்னை ரசிகர்களை தொற்றிக் கொண்டது. ஹஸ்சி மற்றும் ஜடேஜாவின் விக்கெட்டுகள் ஒரே ஓவரில் வீழ்ந்ததால் அதிர்ச்சியில் உறைந்தனர் ரசிகர்கள்.
ஆனால் கேப்டன் டோணி களத்தில் இருந்ததால் நம்பிக்கை இருந்தது. கடைசி 2 ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19-வது ஓவரின் கடைசி பந்தில் டோணியும் அவுட் ஆனார். இதனால் கடைசி ஓவர் என்ன ஆகுமோ? இப்படி சேஸிங் செய்தது வீணாகுமோ என்ற குழப்பம் ஏற்பட்டது. கடைசி ஓவரை வாட்சன் வீசினார். பிராவோ- மோரிஸ் ஜோடி எதிர்க்கொண்டனர். முதல் பந்தில் மோரிஸ் ஒரு ரன் எடுத்தார். 2-வது பந்தில் பிராவோ ரன் எடுக்கவில்லை. இதனால் ஆட்டத்தில் உச்சக்கட்ட டென்ஷன் ஏற்பட்டது. 3-வது பந்தில் பிராவோ ஒரு சிக்சர் அடித்தாரே பார்க்க வேண்டும்... சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஆனந்த தாண்டவமாடினர். பின்னர் வின்னிங் சாட் அடித்த பிராவோ தனக்கே உரித்தான அந்த ஒரு நடனத்தை ஆடினாரே பார்க்கனும்...ரசிகர்கள் அப்படி ஒரு உற்சாகத்தின் எல்லைக்குப் போயினர்!
வெல்டன் பிராவோ!