திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர்கள்- பணியாளர்கள் அடிதடி
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக பொது தரிசனம், கட்டண தரிசனம் ஆகிய இரு வழிகள் உள்ளன. 100 ரூபாய் டிக்கெட் எடுத்தால் தனி வழியாக சென்று சுவாமியை தரிசிக்கலாம். பொது வழியாக சென்றால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி வரும்.
ரதவீதியை சேர்ந்த சங்கரன் மகன் சரவணன். அர்ச்சகரான இவர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேங்காய் உடைத்து கொடுப்பார். இவரது உறவினர் லட்சுமணன் என்பவரும் இதே பணியை செய்து வருகிறார்.
இந்நிலையில் சரவணனின் உறவினர் முத்துலட்சுமி என்பவர் தரிசனம் செய்வதற்காக ரூ.100 டிக்கெட் எடுக்க வரிசையில் நின்ற போது அவரை தடுத்து வேறு வழியாக செல்லும்படி எழுத்தர் செந்தில் குமார் கூறியுள்ளதாக தெரிகிறது. இது குறித்து லட்சுமணனும், சரவணனும் அவரை கண்டித்துள்ளனர். இதில் தகராறு ஏற்பட்டதால் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்கள் கொடுத்த புகாரின பேரில் செந்தில்குமார் உள்ளிட்ட இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதே போல் செந்தில் குமார் கொடுத்த புகாரின் பேரில் அர்ச்சகர்கள் ஜெயமாலினி குமார், மகராஜன் சுப்பையன், கிருஷ்ணமூர்த்தி, தர்மர் உள்பட 34 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் செந்தில்குமாரை தாக்கியவர்களை கைது செய்ய கோரி திடீரென பணியாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.